Tamil Sanjikai

நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக உள்ள ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக பாஜகவின் ரமன் சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கரிலும், மூன்று முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்த மற்றொரு பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் பாஜக தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தற்போதைய தோல்வி பிரதிபலித்தால், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சவால் கடுமையாக இருக்கும். இந்த மூன்று மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 65. பாஜக-வுக்கு தமது கோட்டையில் உள்ள இந்த 65 தொகுதிகள் என்பது பெரிய எண்ணிக்கையாக இருக்கும். அதே நேரம், வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது . தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் கூட காங்கிரஸால், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்த முடியவில்லை.

முன்கூட்டியே தேர்தல் நடத்தியதின் மூலம் தாம் சாதிக்க விரும்பியதை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் சாதித்துவிட்டார். தெலுங்கு தேசத்துடன் அமைக்கும் கூட்டணி காங்கிரசுக்கு ஆந்திராவில் உதவலாம். ஆனால், தெலங்கானாவில் உதவாது என்ற உறுதியான தகவலையும் காங்கிரசுக்கு அவர் அளித்துள்ளார்.

இத்தோடு , பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய இரு கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான தேவையை காங்கிரசுக்கு உணர்ந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தாம் அமைக்கும் பிரம்மாண்ட கூட்டணித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை, சரி செய்ய இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். கடந்த தேர்தலில் பாஜக வென்ற இடங்களில் தற்போது இழந்துள்ளது. அது கடந்த தேர்தலில் வெல்லாத மிசோரம், தெலங்கானா போன்ற இடங்களில் அதனால் புதிய பலம் எதையும் பெற முடியவில்லை. அதைப்போலவே, ஆட்சிக்கெதிரான உணர்வுகளை கருத்தில் கொண்டு மக்களைக் கவரும் செயல்பாடுகளை கடைசி நேரத்தில் முன்னெடுக்க ஒரு வாய்ப்பை மத்தியில் உள்ள பாஜகவுக்கும் இந்த தேர்தல் வழங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 Comments

Write A Comment