Tamil Sanjikai

‘முத்தலாக்’ தடை மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜனதா பெண் எம்.பி. ரமா தேவியிடம் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சைக்குள்ளாகி மன்னிப்பு கேட்டவர் அசம்கான் எம்.பி.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான இவர், உத்தரபிரதேச மாநிலத்தில் கேபினட் மந்திரி பதவி வகித்தார்.

இவர் 121 ஹெக்டேர் நிலப்பரப்பில் அங்கு முகமது அலி ஜாகர் பல்கலைக்கழகத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்துக்காக இவர் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டுமே இவர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி ராம்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஜய்பால் சர்மா கூறுகையில், “ஜூலை 11-ந் தேதி முதல் 2 டஜனுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை ஆக்கிரமித்து அபகரித்துக்கொண்டதாக அசம்கான் மீது புகார்கள் அளித்துள்ளனர். அதன்பேரில் 27 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்குகளில் அசம்கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment