Tamil Sanjikai

மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுகிறது. இதையடுத்து, அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின், 6 எம்எல்ஏக்கள் ஆகியோர் விலகியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில் (என்பிபி) சேர்ந்துவிட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இப்போது, பாஜக மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments

Write A Comment