Tamil Sanjikai

தேனி அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்தவர் விஜய். இவர், அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் அவருக்கும் தினமும் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் கைது செய்யப்பட்டார், சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைகை அணை நீர்த்தேக்கம் அருகே வந்த, அந்த இளம்பெண்ணிடம் தம்மை காதலிக்கும்படி மீண்டும் விஜய் வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுக்கவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி அணையில் குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அங்கிருந்து ஓடி விட்டார், தகவலறிந்து வந்த வைகை அணை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அணையில் குதித்த விஜய்யை தீவிரமாகத் தேடினர்.

ஆனால் அணையில் குதித்த விஜய், நீந்திக் கரைக்கு சென்றதோடு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஆனால் இதுதெரியாமல் நேற்று மாலையும் இன்று காலையும் தீயணைப்பு துறையினர் அணை நீரில் மூழ்கி விஜய்யை தேடிக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அனைத்தும் தெரிய வர தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment