Tamil Sanjikai

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்திய வங்கிகளில் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். மல்லையாவை விசாரணைக்காக லண்டனிலிருந்து நாடு கடத்தக்கோரி இந்தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையா தான் முழுக்கடனையும் திரும்பச் செலுத்திவிடுவதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தை நான் சட்டப்பூர்வமாக சந்தித்துக்கொள்கிறேன். ஆனால், இங்கு முக்கிய விஷயம் மக்கள் பணம். அந்தப் பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் திரும்பச்செலுத்த முன்வருவது மறுக்கப்பட்டால்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுதான், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இங்கிலாந்தைச் சார்ந்த கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, தான் பெற்றக் கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்துவதாகவும் அதை வங்கிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது, மல்லையா நாடு கடத்தப்பட இருப்பதை தவிர்க்கவே என்று விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மல்லையா லண்டனிலிருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வருகிற டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment