Tamil Sanjikai

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோர்ட் மறுப்பு!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று, ஐயப்பனை தரிசிப்பதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 28-ம் தேதி 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும், சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட போது பக்தர்கள் போராட்டம் காரணமாக பெண்கள் செல்ல முடியவில்லை.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மறு ஆய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடந்த வாரம் கேட்டுக்கொள்ளப்பட்ட போது, சபரிமலை தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீது அடுத்த மாதம் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தரப்பில் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் உடனடியாக விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே இவ்விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளது என தெரிவித்தது. நவம்பர் 5 மற்றும் 6-க்கு இடையில் 24 மணி நேரங்கள் மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது, நாங்கள் ஏற்கனவே 13-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளோம் என நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

0 Comments

Write A Comment