Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவருமான யாசின் மாலிக்கை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்தது.

நேற்று மாலை டெல்லி அழைத்து வரப்பட்ட யாசின் மாலிக், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, யாசின் மாலிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி கிடைத்தது.

மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரான மறைந்த முஃப்தி முகமது சயீதின் மகள் ருபய்யா சயீது கடந்த 1989ஆம் ஆண்டில் கடத்தப்பட்டார். இதேபோல் 1990ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த 2 சம்பவங்களிலும் யாசின் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான தீர்ப்பை ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment