Tamil Sanjikai

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது. கடந்த மாதம் 17-ம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினார்கள். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் கலவர பூமிபோல காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறப்பு பூஜைக்காக வரும் 5-ம் தேதி திங்கள் கிழமை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

0 Comments

Write A Comment