Tamil Sanjikai

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் சிலரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரை குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி புகாரை நீதிபதிகள் குழு நிராகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு அணுகப்பட்ட முறைக்கு பெண் வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் பெண்கள் அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அவர்கள் இன்று உச்சநீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்புப் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment