Tamil Sanjikai

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் தற்போதுள்ள ரூ.100 லிருந்து 10 மடங்கு அபராத தொகை அதிகரித்து ரூ.1000 அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை பெரு நகரில் வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அபராதம் ரூ.100 என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அலட்சியமாக வந்து அபராதம் கட்டி விட்டுச் செல்வதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் செலுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100 லிருந்து ரூ.500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

சாலைகளில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5,000, ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும். காரில் சீட்பெல்ட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment