Tamil Sanjikai

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில் வசித்து வந்தார். கடந்த 16-ந் தேதி ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடியமயங்கி கிடந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.

அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோகித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபூர்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததால், கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

0 Comments

Write A Comment