கடந்த 2012 ஆம் ஆண்டின் நிர்பயா பலாத்கார வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து விட்டதாகவும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி, நிர்பயா(23) என்ற மாணவி ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் அந்த ஆண்டின் டிசம்பர் 29ஆம் தேதியே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமான 6 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனிடையில், அந்த குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் என்பவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவன் சிறுவன் என நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கின் மற்ற குற்றவாளிகளான முகேஷ்(31), பவான் குப்தா(24), மற்றும் வினய் ஷர்மா(25) ஆகிய மூவரும் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, இவர்களின் மறுபரிசீலனை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த குற்றவாளிகளுக்கான சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து விட்டதாகவும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவதற்கான வாய்ப்பு ஓன்று மட்டுமே தற்போது உள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், இந்த கருணை மனுவை தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு வெறும் 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் தவறும் பட்சத்தில், மரண தண்டனையில் இருந்து விடுபட அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்று கூறியுள்ளார் சிறை அதிகாரியான சந்தீப் கோயல்.
0 Comments