Tamil Sanjikai

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. இதில், பல்வேறு விதிமீறல்களுக்காக, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு தற்போது விதிக்கப்படும் அபராத தொகை 500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோன்று இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தற்போது விதிக்கப்படும் 1000 ரூபாய் அபராதமானது 2000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டினால், அதற்கு தற்போது 400 ரூபாய் தண்டம் விதிக்கப்படுகிறது. இதுவே, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா அமலுக்கு வந்தால், இதற்கு 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சீமேலும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 1,000 ரூபாய் ஃபைன் போடப்படும்.

முக்கியமாக, மது அருந்திவிட்டு பைக், கார் ஓட்டுபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 2000 ரூபாய் அபராதம், 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.இவையெல்லாவற்றுக்கும் மேலாக, சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், வாகனத்தின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட சிறார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், வாகனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு பல்வேறு அதிரடி அம்சங்கள் இச்சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. மாநிலங்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment