Tamil Sanjikai

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு உச்சகட்ட அளவை எட்டியிருப்பதால் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. லாரிகள் பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை அதனால் தற்போது கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment