முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்திற்கிடையே சில உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பினராயி விஜயனிடம் ,அப்போது பேசிய சுயேட்ச்சை உறுப்பினர் பி.சி.ஜார்ஜ், முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பேபி அணையும் உடையும் தருவாயில் உள்ளது என புகார் தெரிவித்தார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை கேரள அரசு செய்து வருகிறது. அங்கு நிச்சயம் அணை கட்டப்படும். புதிய அணை அமைய உள்ள இடம் பெரியார் புலிகள் காப்பகத்திற்குட்பட்டது என்பதால் வனத்துறை, புலிகள் காப்பக ஆணையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
அவர் பேசி கொண்டிருந்த போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கேரள சட்டப்பேரவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments