ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 27-ஆம் தேதி தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. கட்டாக்கில் உள்ள பாரபட்டி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஷாரூக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில்,ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் , கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு புரி கடற்கரையில் பண்டைய ஒடிசாவின் புகழ்பெற்ற கடல்வழிப் போக்குவரத்தை குறிக்கும் வகையில் மணல் படகு சிற்பம் உருவாக்கி உள்ளார். அதில் ஒடிசாவில் விரைவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரை குறிக்கும் வகையில் அந்த படகில் வாசகத்தை எழுதியுள்ளார். . இந்த சிற்பம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மணல் சிற்பத்தினை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டு,சுதர்சன் பட்நாயக் கார்த்திகை பூர்ணிமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு அனைவரையும் வரவேற்றும் உள்ளார்.
0 Comments