Tamil Sanjikai

மஹாராஷ்டிராவில் 2 ஏக்கர் நிலத்தில் விளைந்த கத்தரிக்காயை கிலோ 20 பைசா என்ற விலையில் கொள்முதல் செய்ததால் வேதனையடைந்த விவசாயி தோட்டத்தை மொத்தமாக அழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்தில் உள்ள சகுரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பவேக், மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது 2 ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளார்.

சொட்டுநீர் பாசனம், உரம் என 2 லட்சம் ரூபாய் பொருட் செலவிலும், கடும் உடல் உழைப்பிலும் விளைந்த கத்தரிக்காயை எடுத்துக்கொண்டு நாசிக் மற்றும் குஜராத்தின் சூரத் என்று இரண்டு மொத்த கொள்முதல் சந்தைக்கு அவர் சென்றுள்ளார். இரண்டு இடங்களிலும், ஒரு கிலோ கத்தரிக்காய்-க்கு சுமார் 20 பைசா மட்டுமே விலையாக கொடுக்க வியாபாரிகள் முன் வந்துள்ளனர். கிலோ 20 பைசா என்ற விலையில் மொத்தமாக அவருக்கு சுமார் 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. உரம் வாங்கிய வகையில், இன்னும் 35 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், விளைந்த காய்கறியும் விலை போகாமல் இருந்ததால் வேதனையில் இருந்த ராஜேந்திர பவேக், கத்தரிக்காய் தோட்டத்தை மொத்தமாக அழித்துள்ளார்.

“உரத்துக்காக வாங்கிய கடனை எப்படி திரும்ப கட்டப்போகிறேன் என்று தெரியவில்லை. இதனால், மேலும் கத்தரிக்காயை விளைய வைத்து எனது உழைப்பை வீணாக்க விரும்பவில்லை” என்று கவலையுடன் அவர் தெரிவித்துள்ளார். விளை பொருட்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினர் கடந்த வாரம் தான் டெல்லியில் பிரமாண்ட பேரணியை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment