Tamil Sanjikai

லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது . இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்குமாறு ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜூலை 17-க்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 Comments

Write A Comment