Tamil Sanjikai

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள துபா கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்திர குமார். சி.ஆர்.பி.எஃபின் 80 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார். அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த 5 சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் உயிரிழந்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜிதேந்திர குமார் ஐந்து வருடங்களாக கோமாவில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் நடந்த சமயத்தில் சட்டிஸ்கரில் சி.ஆர்.பி.எஃப் துணை ஆய்வாளராக இருந்த யோக்யான் சிங், “குமார் எப்படியும் குணமடைந்து வந்து விடுவார், அவரை அவரது சொந்த ஊரான பீகாருக்கு அனுப்பி விடலாம் என நான் மிகவும் நம்பியிருந்தேன். இனி தாக்குதல் நடந்த அந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் குமாரின் நினைவுகள் வருவதை தவிர்க்க முடியாது. அவரது உடல் பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

0 Comments

Write A Comment