Tamil Sanjikai

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஸ்ரீநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று நேற்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல இயங்கின.

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தலைவர்கள் கூறிவருகிறார்கள். மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல்வாதியாக மாறிய ஷா பைசல் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களை நோக்கி மாணவர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமர் சிங் கல்லூரியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment