Tamil Sanjikai

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும் அதுவும் 1.20 லட்சம் மரங்கள் இதுவரை வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தினால், சேர்வராயன், கல்ராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த திட்டம், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை ஜுன் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.

0 Comments

Write A Comment