Tamil Sanjikai

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இரவு 11.15 மணியளவில், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர்.

அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஐசியூவில் , மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. ஏற்கனவே, கடந்த மே மாதமும் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வழக்கறிஞரான அருண் ஜெட்லி, மோடியின் முதலாவது அரசில் முக்கிய இலாக்களை கவனித்து வந்தார். உடல்நலம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அருண் ஜெட்லி செய்து கொண்டார்.

0 Comments

Write A Comment