Tamil Sanjikai

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்த எதிர்பாராத இந்த தாக்குதலில் அப்துல் மஜித், மன்சூர் அஹமத், முஹம்மது அமின் ஆகிய 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த வீரரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் காவல் சாவடிக்குள் புகுந்து 4 தானியங்கி துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுவிட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் முடக்கி விட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.

0 Comments

Write A Comment