Tamil Sanjikai

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ந்தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளி போனது. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அமித்ஷா அனுமதி வழங்கினார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். எடியூரப்பா பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நடக்கிறது.

இதன்படி முதல்கட்டமாக 17 பேர் மந்திரிசபையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இதற்காக 17 எம்.எல்.ஏ.க்களின் பெயருடன் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு முதல் மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதினார்.

அதன்படி இன்று காலை பெங்களூருவில் கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில், சி.என். அஸ்வத் நாராயண், கோவிந்த் எம். கர்ஜோல், கே.எஸ். ஈஸ்வரப்பா உள்ளிட்ட 17 மந்திரிகள் பதவியேற்று கொண்டனர். மந்திரிகளாக பதவி ஏற்றவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி எடியூரப்பா, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பதையொட்டி, பெங்களூரு ராஜ்பவனை சுற்றியுள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment