கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் முக்கிய மாவட்டங்களான கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 50-க்கும் மேலானவர்கள் சமீபத்தில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களில் 5 பேரை துருக்கி போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மேலும் 10 பேர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு அருகே பூதப்பாறையை சேர்ந்த 2 குடும்பத்தினரும், குருவா பகுதியை சேர்ந்த ஒருவரும் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்வதற்காக துபாய் வழியாக ஆப்கானிஸ்தான் சென்றது தெரியவந்தது. இவர்களுக்கு ஏற்கனவே சில தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய ஏஜன்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments