Tamil Sanjikai

டெல்லியை சேர்ந்த வாலிபர் புனித் அகர்வால் (26) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மேலும் ஒரு சிறு வணிகத்தையும் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது மொபைல்போனுக்கு தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மொத்தமாக கடந்த 2 நாட்களில் மட்டும் அவருக்கு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து உள்ளன. மேலும் அதிகப்படியான எஸ்.எம். எஸ். தகவல்களும் வந்து உள்ளன.

பொறுத்து பொறுத்து பொறுமை இழந்த அகர்வால் இது குறித்து நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் தொடர்ந்து ஒலிக்கும் மொபைலில் இருந்து அவருக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லை.

அழைப்பு விடுத்தவர்கள் அனைவரும் சன்னி லியோனியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என கூறி உள்ளனர்.

பிறகு தான் தெரிந்தது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சன்னி லியோனி நடித்த "அர்ஜூன் பட்டியாலா" என்ற பஞ்சாபி படம் வெளியாகி உள்ளது. அதில் நடித்துள்ள சன்னி லியோனி தனது மொபைல் போன் நம்பர் என அதில் நடித்துள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஒரு நம்பரை கூறி உள்ளார். அதே நம்பர் புனித் அகர்வாலிடம் உள்ளது. கடந்த 12 வருடங்களாக அந்த நம்பரை புனித் அகர்வால் பயன்படுத்தி வருகிறார். இதை தொடர்ந்து தான் அவருக்கு இது போன்ற அழைப்புகள் வந்து உள்ளன.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடமேற்கு) விஜயந்த ஆர்யா கூறியதாவது:-

அவரது புகாரை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் இந்த வழக்கில் கிரிமினல் குற்றம் எதுவும் இல்லை. புகார்தாரர் ஒரு சிவில் தீர்வை நாட வேண்டும்” என்று கூறினார். இன்று நீதிமன்றத்தை அணுகுவதாகக் அகர்வால் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளாக இதே மொபைல் எண்ணை பயன்படுத்தி வருகிறேன். இந்த நம்பரை மாற்றினால் இது எனது வணிகத்தை மிகவும் பாதிக்கும் என்பதால் அதை மாற்ற முடியாது. எனது உலகமும், வேலையும் இந்த மொபைல் எண்ணைச் சுற்றி தான் உள்ளது என்றார்.

முதல் அழைப்பு, வெள்ளிக்கிழமை பிற்பகல் அகர்வாலுக்கு வந்தது. “அழைப்பாளர், நான் சன்னி லியோனியுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் என கூறினார். அவர் தவறான எண்ணை டயல் செய்ததாக நான் நினைத்தேன், ஆனால் இதுபோன்ற அழைப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. இந்த அழைப்புகள் இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல், இந்தோனேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் வந்தது என கூறினார்.

0 Comments

Write A Comment