Tamil Sanjikai

பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடித்து வெளிவந்த "ஏக் லட்கி கோ தேகா தோ ஐஸா லகா" படத்தை ஆஸ்கர் நூலகத்தில் வைக்கப்போவதாக வெளியான செய்தி தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்கரின் அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அதிகாரபூர்வ நூலகத்தில் உலக அளவில் வெளிவந்துள்ள முக்கியப் படங்கள் இடம் பெறுவது வழக்கம். முழுக்க முழுக்க ஆஸ்கர் நிபுணர்கள் குழுவுக்குப் படம் பிடித்தால் மட்டுமே இந்நூலகத்தில் இடம்பெறும் கவுரவம் கிடைக்கும்.

அவ்வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஏக் லட்கி கோ தேகா தோ ஐஸா லகா'விற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஷெல்லி சோப்ரா தார் இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகி சோனம் கபூர். நகைச்சுவை, காதல் ஏக்கம், குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்க போராடுதல் என்று பின்னப்பட்ட இக்கதையின் அடிநாதமாக தன்பாலின உறவு பற்றி பேசப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் திரைக்கதை பிரதியொன்றையும் ஆஸ்கர் அமைப்பு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சோனம் கபூர் தெரிவிக்கையில், ''இத்திரைப்படம் என்னுடைய ஸ்பெஷல் சினிமா என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு எனக்குத் திருப்தியை தந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. என் தந்தையோடு இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுதான். அது மட்டுமின்றி இப்படத்தில் ஒரு தகுதிவாய்ந்த செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படத்தைப் பார்த்தவர்கள் படத்தை பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெறும் செய்தியே என்னை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் அனில் கபூர், ஜூகி சாவ்லா மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வெளியாகி நேற்று வரை மட்டும் 8 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது இத்திரைப்படம்.

0 Comments

Write A Comment