Tamil Sanjikai

தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியினர் போட்ட பூட்டு, பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது அவரது எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர், இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வருகை தந்தனர். அப்போது, போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் விஷால் தரப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேசிய நடிகர் விஷால், இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை எனவும், அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.

சாவியை வைத்து பூட்டை திறக்க அனுமதிக்க முடியாது; உடைத்தே தீருவேன் என்று விஷால் தெரிவித்தார். அதற்கு பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது; சட்டவிரோதமாக கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜூ கூறினார். இதனையடுத்து நடிகர் விஷாலும், அவரின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பகல் 1.45 மணி வாக்கில் திறக்கப்பட்டது.

0 Comments

Write A Comment