Tamil Sanjikai

விக்ரம் நடித்த தூள் படத்தின் ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.

ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’என மக்களால் அன்பாக அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனை தொடர்ந்து அவர், சொந்த ஊரான பரவைக்கு வந்து விட்டார். வயதாகி விட்டதால் சரிவர காது கேட்காத நிலையிலும், வாய் பேசமுடியாத நிலையில் உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருந்துவந்தார்.

இந்தநிலையில் அவர் தற்போது தனியார் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார். அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் தனியார் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவை முனியம்மாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகன் செந்தில்குமாரை தவிர, மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

0 Comments

Write A Comment