Tamil Sanjikai

தனது 76 ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் நேற்று மாலை நடந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இசைக்கலைஞர்களின் சங்கத்திற்காக, தனது சொந்த செலவில் கட்டிடம் ஒன்றை கட்டிவருவதாக அவர் அறிவித்துள்ளார்.

'இசைஞானி' இளையராஜாவுக்கு நேற்று 76வது பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று அவரது வீட்டிற்கு ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றும், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, எனது பிறந்த நாளையொட்டி இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை சென்னை பூந்தமல்லி அருகே அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இளையராஜா தான் இசையமைத்த, பாடிய பல பாடல்களை பாடி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, மனோ உள்ளிட்ட பிரபல பாடகர்களுடன், நடிகர் கமல் ஹாசன், விவேக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், இசைக்கலைஞர்களின் சங்கத்திற்காக கட்டிடம் ஒன்றை சொந்த செலவில் கட்டிவருவதாக அவர் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

0 Comments

Write A Comment