Tamil Sanjikai

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவிற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. அனால் , படம் தோல்வி அடைந்ததை காரணம் காட்டி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவருக்கு 1கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியதாக கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சிம்புவும், மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், ஒருதலைபட்சத்துடன் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இதற்காக விஷாலும், மைக்கேல் ராயப்பனும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிம்புவின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாகவும் அதனால் புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்து கொள்வதில், தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் சிம்புவின் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment