நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. சீனாவில் நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் திரு.ஷி இப்படித்தான் சொல்வார். பணிஓய்வு பெற்று விட்டதை மற்றவர்களின் ஆச்சரியத்தினூடே தன்னடக்கத்துடன் அதற்கு அடுத்துச் சொல்வார். திரு.ஷி இந்த வார்த்தைகளை, டெட்ராய்ட்டில் தங்கியிருந்தபோது, ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொண்டார், அவருடைய வேலைகுறித்து அவளுக்கு அவர் விளக்க முற்பட்டபோது, அவருடைய ஆங்கிலம் உதவாது அவரைக் கைவிட்டதும் காற்றில் படம் வரைந்து காட்டினார். “ராக்கெட் விஞ்ஞானி!” என்று அவள் ஆச்சரியத்தோடு வாய்விட்டுச் சிரித்தாள்.
அமெரிக்காவில் அவர் சந்திக்கும் நபர்கள், அவருடைய வேலையைத் தெரிந்துகொண்டதும் ஏற்கெனவே நட்பாகி விட்டதுபோலத் தோன்றும், எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மிட்வெஸ்ட் நகரத்திலுள்ள அவருடைய மகள் வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள்தான் ஆகிறது என்றாலும் திரு.ஷி நிறையத் தொடர்புகளை உருவாக்கியிருந்தார். குழந்தைகளை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வரும் அம்மாக்கள் அவரைப்பார்த்துக் கையசைத்தனர். ஒரு வயதான தம்பதி, கணவர் கோட்-சூட்டிலும், மனைவி அரைப்பாவாடையிலும் இருப்பர், தினமும் காலை ஒன்பது மணிக்கு கைகோர்த்தபடி அந்தப் பூங்காவிற்கு வருபவர்கள்; நின்று அவரை விசாரித்துவிட்டுதான் செல்வார்கள், எப்போதும் கணவர்தான் பேசுவார், மனைவி புன்னகையோடு அருகில் நின்றுகொண்டிருப்பார். ஒரு கட்டிடம் தள்ளி அமைந்திருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஒரு பெண்மணி அவரோடு பேசுவதற்காக வருவார். அவளுக்கு வயது எழுபத்து ஏழு, அவரைவிட இரண்டு வயது மூத்தவள், ஈரானிலிருந்து வந்தவள். இரண்டு பேருக்குமே ஆங்கிலம் கொஞ்சம்தான் தெரியும் என்றாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் எந்தச்சிரமமும் இருக்கவில்லை, வெகு சீக்கிரமே நண்பர்களாகி விட்டனர்.
அவ்வப்போது “அமெரிக்கா நல்ல நாடு,” என்பாள். “மகன்கள் நன்றாகச் சம்பாதிக்கின்றனர்.”
உண்மையில் அமெரிக்கா வளமான நாடுதான். திரு.ஷியின் மகள் இங்கே கல்லூரியில் கிழக்காசியத் துறையின் நூலகராகப் பணிசெய்கிறாள், அவர் இருபது வருடங்களில் சம்பாதித்தைவிட அதிகமாக, ஒரு வருடத்தில் சம்பாதிக்கிறாள்.
“என் மகளும் நிறையப் பணம் சம்பாதிக்கிறாள்.”
“அமெரிக்கா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் நல்ல நாடு.”
“ஆமாம், ஆமாம். நான் சீனாவில் ராக்கெட் விஞ்ஞானி. ஆனால் மிகவும் ஏழை. ராக்கெட் விஞ்ஞானி தெரியுமா?” கைகளைக் கூம்பாக்கியபடி திரு.ஷி சொல்வார்.
”சீனா எனக்குப் பிடிக்கும். சீனா நல்ல நாடு, மிகவும் பழையது.”
“அமெரிக்கா இளமையான நாடு, இளைஞர்களைப் போல.”
“அமெரிக்கா மகிழ்ச்சியான நாடு.”
“இளைஞர்கள்தான் வயதானவர்களை விடச் சந்தோஷமாக இருக்கிறார்கள்,” என்பார் திரு.ஷி, ஆனால் அவருக்கே வெகுசீக்கிரமாக அம்முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றும். இந்தக்கணம் அவர் வாழ்க்கையில் எப்போதும் இருந்ததைவிட மகிழ்வாகத்தான் உணர்கிறார். காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் நேசிக்கக்கூடிய, அவருக்கு எதிரேயுள்ள அப்பெண்மணியும் சந்தோஷமாகத்தான் தெரிகிறாள்.
சமயத்தில் அவர்கள் இருவருக்குமே ஆங்கிலம் தீர்ந்துவிடுகிறது. பிறகு அவள், கொஞ்சம் ஆங்கிலம் கலந்த பெர்சிய மொழிக்குத் தாவிவிடுவாள். திரு.ஷிக்கு அவளிடம் சீனத்தில் பேசுவது சிரமமாக இருக்கும். அதற்குப்பிறகு பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு அவள்தான் தனியாக பேச்சை நகர்த்திச்செல்வாள். அவர் தலையாட்டிக்கொண்டு புன்னகையை வெளிப்படுத்துவார். அவள் என்ன சொல்கிறாள் என்பது முழுவதுமாகப் புரியாது, ஆனால் அவரோடு பேசிக்கொண்டிருப்பதால் அவளடையும் சந்தோஷத்தை அவரால் உணரமுடியும், அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவரடையும் அதே சந்தோஷம்.
காலைவேளைகளில் பூங்காவில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருக்கும் நேரங்களை திரு.ஷி எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். “மேடம்” என்றுதான் அவளைக் குறிப்பிடுவார், இதுவரை அவள் பெயர் என்னவென்று கேட்டதில்லை. மேடம் எப்போதும், அவள் வயதிலிருக்கும் பெண்கள் அல்லது அவள் எங்கிருந்து வருகிறாளோ அந்த இடத்துக்குப் பொருந்துமென அவர் கற்பனை செய்திராத வகையில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சளில் ஆடை அணிவாள். அவளிடம் உலோகத்தால் ஆன ஒரு ஜதை கொண்டை ஊசிகள் உண்டு, ஒன்று வெள்ளையானை மற்றொன்று நீலம் மற்றும் பச்சை நிறத்தாலான மயில். அவற்றில் ஒன்று அவளுடைய அடர்த்தியற்ற கூந்தலைத் தளர்ச்சியாகக் கவ்விப்பிடித்திருக்கும் விதம் அவருக்கு அவளுடைய மகளின் சிறுவயதை - முழுவதும் வளர்ந்திராத கூந்தலில், ப்ளாஸ்டிக்கால் ஆன பட்டாம்பூச்சி க்ளிப் நெற்றியில் தொங்கிக்கொண்டிருக்கும் பருவத்தை - ஞாபகப்படுத்தும். திரு.ஷி, சிலசமயங்களில் மேடத்திடம், தன் மகள் சிறுமியாகவும் வாழ்க்கை நம்பிக்கையோடும் இருந்த அந்த நாட்களை எவ்வளவு விரும்புகிறேன் என்று சொல்ல நினைப்பார். ஆனால் அவருக்குத் தெரியும் அவர் ஆரம்பிக்கும் முன்னமே அவர் ஆங்கிலம் அவரைக் கைவிட்டுவிடும். தவிரவும் கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர் வழக்கமல்ல.
மாலைநேரங்களில், மகள் வீட்டிற்குள் வரும்போது திரு.ஷி இரவுணவைத் தயார் செய்திருப்பார். இதை, சில வருடங்களுக்கு முன்பு, அவர் மனைவி இறந்தபின் சமையல் வகுப்பொன்றில் சேர்ந்து கற்றுக்கொண்டார், கல்லூரியில் எப்படிக் கணிதத்தையும் இயற்பியலையும் ஆர்வத்துடன் பயின்றாரோ அதே ஆர்வத்துடன் இதையும் கற்றுக்கொண்டார். இரவுணவின்போது, ”ஒவ்வொரு மனிதனும் பிறப்பிலேயே, உபயோகிப்பதை விடவும் அதிகத் திறமைகளைக் கொண்டிருக்கிறான்,” என்பார்.
“நான் கற்பனை செய்துகூடப் பார்த்திராத விஷயம், இந்த சமையல், ஆனால் இப்போது பார், கற்பனை செய்ததைவிட நன்றாகச் செய்கிறேன்.”
“ஆமாம், மிக நன்றாக இருக்கிறது,” என்பாள் மகள்.
“அதைப்போலவே,” - என்று மகளை ஒரு பார்வை பார்ப்பார் - “வாழ்க்கையும் நாம் அறிந்ததை விட அதிகச் சந்தோஷங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைப் பார்ப்பதற்காக நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.”
மகளிடமிருந்து பதில் வராது. அவர் தன் சமையல் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், மகள் அதைப் பாராட்டினாலும், அவள் சாப்பிடும் அளவு மிகக்குறைவானது, கடமைக்காகத்தான் சாப்பிட்டாள். வாழ்க்கையை எவ்வளவு ஆர்வத்துடன் அணுகவேண்டுமோ அவ்வளவு ஆர்வம் அவளிடம் இல்லாதது அவருக்குக் கவலையாக இருந்தது. அவளுக்கு, அதற்கான காரணமும் இருந்தது, ஏழுவருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு சமீபமாக விவாகரத்தானவள். அவருடைய முன்னாள் மருமகன் விவாகரத்துக்குப்பின் நிரந்தரமாக பெய்ஜிங் சென்று விட்டான். அவர்களின் திருமணப் படகு எதனால், மறைந்திருந்த பாறையில் மோதியது என்று திரு.ஷி-க்குத் தெரியாது, ஆனால் எந்தக் காரணமாக இருந்தாலும் அவள் தவறாக மட்டும் இருக்கக்கூடாது. அவள் ஒரு நல்ல மனைவியாக உருவானவள், மெல்லிய குரலும் கருணை நிரம்பிய இதயமும் கொண்டவள், கடமையுணர்ச்சியும் அழகும் நிறைந்தவள், அவள் அம்மாவின் இளையவடிவம் அவள். அவர் மகள் அவருக்கு அழைத்து தன்னுடைய விவாகரத்து குறித்துத் தெரிவித்ததும், திரு.ஷி அவளுடைய தாங்கமுடியாத துயரத்தை உணர்ந்தார், தான் அமெரிக்காவுக்கு வந்து அவள் இயல்புநிலைக்குத் திரும்ப உதவுவதாகக் கூறினார். அவள் மறுத்துவிட்டாள், ஒருமாத ஓய்வூதியம் முழுவதையும் செலவழித்துத் தினமும் அவளுக்குத் தொலைபேசியில் அழைத்து மன்றாடினார். கடைசியில், தன்னுடைய எழுபத்து ஐந்தாவது பிறந்தநாளுக்கான விருப்பமாக அமெரிக்காவைப் பார்க்கவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டாள். அது பொய்தான், ஆனால் அது நல்லதொரு காரணமாக அமைந்தது. அமெரிக்காவும் பார்க்கவேண்டிய இடம்தான்; அதைவிடவும், ஒரு ராக்கெட் விஞ்ஞானி, நன்கு உரையாடக்கூடியவர், அன்பான அப்பா, மகிழ்ச்சியான மனிதன் என அமெரிக்கா அவரைப் புதியதொரு மனிதனாக்குகிறது.
இரவுணவுக்குப்பின், திரு.ஷியின் மகள் படுக்கையறையில் படிக்கச்சென்றாள் அல்லது வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பினாள். திரு.ஷி அவளோடு வெளியில் செல்ல, அவள் தனியாகப் பார்க்கிறாள் என்று அவர் யூகித்த திரைப்படங்களுக்கு உடன்வரக் கேட்பார், ஆனால் அவள் பணிவாகவும் அதேசமயம் உறுதியோடும் அதை மறுத்துவிடுவாள். தனிமையில் நிறையநேரம் இருப்பது நல்லதல்ல, அதுவும் அவரது மகளைப்போல சிந்தனைவயத்தில் இருக்கிற பெண்களுக்கு நிச்சயம் நல்லதல்ல. அவளது தனிமையைச் சமாளிக்கும் விதமாக அவர் பேசத்துவங்குவார், அவர் கண்முன் நிகழாத அவளது வாழ்க்கையின் மற்றொரு பாகம் பற்றிக் கேள்விகள் எழுப்புவார். அன்றைக்கு வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். களைப்போடு, ‘நன்றாக இருந்தது’ என்பாள். ஆனாலும் இவர் அசராமல் அவளுடன் பணிசெய்பவர்கள் பற்றிக்கேட்பார், ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருக்கிறார்களா, அவர்களுக்கு என்ன வயதாகிறது, அவர்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதா, குழந்தைகள் உண்டா என்று விசாரிப்பார். மதிய உணவாக என்ன சாப்பிட்டாள், தனியாகச் சாப்பிட்டாளா, என்ன மாதிரியான கணினியை உபயோகிக்கிறாள், என்ன புத்தகம் படிக்கிறாள் என்று கேட்பார். இந்த விவாகரத்து விஷயத்தினால் வெட்கப்பட்டு தொடர்பற்றுப் போயிருப்பார்கள் என்று இவர் நினைக்கும் அவளது பள்ளிக்காலத்து நண்பர்கள் பற்றி விசாரிப்பார். அவள் இருக்கும் சூழ்நிலையை மாற்ற வேண்டியதன் அவசரம் குறித்து, அவளுக்குப் புரியும் என்ற நம்பிக்கையில் அவளுடைய எதிர்காலத்திற்கான திட்டம் பற்றி விசாரிப்பார். இருபதுகளில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் திருமணத்திற்குத் தகுதியான பெண்கள் அப்போதுதான் மரத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்ட ‘லிச்சி’ பழங்களைப் போன்றவர்கள்; கடக்கும் ஒவ்வொருநாளும் அவர்களைப் பழையதாக்கி விருப்பக் குறைவானதாக மாற்றிவிடும், அவர்கள் தங்கள் மதிப்பை வெகுசீக்கிரமே இழந்து தள்ளுபடி விலைக்கு வந்து கைகழுவி விடப்படுவர்.
தள்ளுபடி விலை என்பதை அவளிடம் குறிப்பிடக்கூடாது என்பது திரு.ஷி-க்கும் தெரியும். ஆனாலும் வாழ்க்கையின் பயன் குறித்து அறிவுரைக்காமல் இருக்க அவரால் முடியவில்லை. எவ்வளவு பேசுகிறாரோ அவ்வளவு பொறுமை இழந்துகொண்டே வந்தார். ஆனால் அவரது மகளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொருநாளும் சாப்பாடும் பேச்சும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியாக அவர், அவள் தனது வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமோ அப்படியில்லை என்று சுட்டிக்காட்டினால், “இந்த முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்? நான் என் வாழ்க்கையை நல்லவிதமாகத்தான் அனுபவிக்கிறேன்.” என்பாள்.
“ஆனால் அது பொய், ஒரு மகிழ்ச்சியான மனிதரிடம் இவ்வளவு அமைதி இருக்காது.”
சோற்றுக்கிண்ணத்திலிருந்து பார்வையை உயர்த்தியபடி கேட்பாள். “அப்பா, நீங்களும் அமைதியானவராகத்தான் இருந்தீர்கள், ஞாபகமிருக்கிறதா? அப்போது நீங்கள் மகிழ்ச்சியற்றா இருந்தீர்கள்?”
மகளிடமிருந்து இவ்வளவு நேரடித்தன்மைக்கு திரு.ஷி தயாராக இல்லாததால் அவரால் பதில் சொல்லமுடியவில்லை. அவள் மன்னிப்புக் கேட்கவும் பேசுகின்ற விஷயத்தை மாற்றுவதற்கும் காத்திருந்தார், இங்கிதமுள்ளவர்கள் தங்கள் கேள்வி அடுத்தவரைச் சங்கடப்படுத்தி விட்டது என்று தெரிந்ததும் அப்படித்தானே செய்வார்கள், ஆனால் இவள் அவரை விடமாட்டாள். மூக்குக்கண்ணாடிக்குப் பின்னாலிருக்கிற அவள் அனுதாபமற்ற கண்கள், அகலத்திறந்து அவருக்கு அவளுடைய குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தும். அவளுக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம், அவர் பின்னால் எங்கெல்லாம் வரமுடியுமோ அங்கெல்லாம் வந்து அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்படி கேட்பாள். அவளுடைய கண்கள் அவள் தாயையும் நினைவூட்டுகின்றன; திருமணம் ஆனபின் ஒருமுறை இதேபோல கேள்வியோடு அவரைப் பார்த்து பதிலுக்காகக் காத்திருந்தாள், ஆனால் அவளுக்கான பதில் அவரிடம் இல்லை.
அவர் பெருமூச்சுடன், “நான் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறேன்,” என்பார்.
“அப்படிச் சொல்லுங்கள் அப்பா, ஆக நம்மால் அமைதியாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடியும், இல்லையா?”
“உன் மகிழ்ச்சியைப்பற்றி ஏன் என்னிடம் பேசக்கூடாது?” என்பார் திரு.ஷி. “உன் வேலையைப் பற்றிச் சொல்லேன்.”
“நீங்கள் உங்கள் வேலைபற்றி அதிகம் பேசியதில்லை, ஞாபகமிருக்கிறதா? நான் கேட்டாலும் கூட பேசமாட்டீர்கள்.”
“ஒரு ராக்கெட் விஞ்ஞானி என்றால் அப்படித்தான். என் வேலை ரகசியமானது.”
“நீங்கள் எதைப்பற்றியும் அவ்வளவாகப் பேசியதில்லை,” என்பாள்.
திரு.ஷி வாயைத் திறப்பார் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. பல கணங்களுக்குப் பிறகு, “நான் இப்போது பேசுகிறேன். முன்னேறியிருக்கிறேன், இல்லையா?”
“நிச்சயமாக,” என்பாள்.
“அதைத்தான் நீயும் செய்யவேண்டும். நிறையப் பேசு,” என்பார் திரு.ஷி. “இப்போதே ஆரம்பி.”
அவர் மகள் அதில் அதிக முனைப்புக் காட்டமாட்டாள். வழக்கமான அமைதியுடன் வேகமாகச் சாப்பிட்டு அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் வீட்டை விட்டுப் போயிருப்பாள்.
அடுத்தநாள் காலை, திரு.ஷி மேடத்திடம் முறையிட்டுக் கொண்டிருப்பார், “என் மகள், மகிழ்ச்சியாக இல்லை.”
“மகள் இருப்பது மகிழ்ச்சி,” என்பாள் மேடம்.
”அவள் விவாகரத்தானவள்.”
மேடம் தலையசைத்துவிட்டு பெர்சிய மொழியில் பேச ஆரம்பிப்பாள். மேடத்திற்கு விவாகரத்து என்றால் என்னவென்று தெரியுமா என திரு.ஷிக்கு உறுதியாகத் தெரியாது. வாழ்க்கை மீது இவ்வளவு காதலாக இருக்கிற ஒரு பெண் நிச்சயம் அவள் கணவனாலோ அல்லது அவளது மகன்களாலோ வாழ்வின் மகிழ்ச்சியற்ற தருணங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பாள். திரு.ஷி மேடத்தின் முகத்தைப் பார்த்தார், அவளது பேச்சாலும் சிரிப்பாலும் முகம் ஒளியடைந்திருந்தது, அவளைவிட நாற்பது வருடம் இளமையான தனது மகளிடம் இது இல்லையே என சற்றே பொறாமைப்பட்டார். மேடம் அன்று, பளிச்சிடும் இளஞ்சிவப்புநிறத் துணியில் ஊதாநிறக் குரங்குகள் வரையப்பட்ட சட்டையை அணிந்திருந்தாள், குரங்குகள் குதித்துக்கொண்டும் இளித்துக்கொண்டும் இருந்தன; தலையில் அதே வேலைப்பாட்டில் ஒரு ஸ்கார்ஃப் அணிந்திருந்தாள். அவள் புலம்பெயர்ந்தவள்தான், ஆனால் மகிழ்ச்சியோடு புலம் பெயர்ந்திருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. திரு.ஷி, ஈரான் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றையும் அதன் தற்போதைய வரலாற்றையும் நினைவுகூர முயற்சித்தார்; அவருக்கிருக்கும் குறைந்தபட்ச அறிவைக்கொண்டு, மேடம் ஒரு அதிர்ஷடக்காரப் பெண்மணி என்ற முடிவுக்குத்தான் வரமுடிந்தது. அவரும் அதிர்ஷடம் உள்ளவர்தான், பெரிதும் சிறிதுமான குறைகளோடு.
வெவ்வேறு உலகிலிருந்து வந்து வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தும் இந்த இலையுதிர்காலத்தின் இளவெயிலில் தானும் மேடமும் சந்தித்துக்கொண்டிருப்பது எவ்வளவு அற்புதமானது என்று யோசிப்பார்.
“சீனாவில் நாங்கள் இப்படிச் சொல்வதுண்டு - Xiu bai shi ke tong zhou,” மேடம் நிறுத்தியதும் திரு.ஷி சொல்வார். உங்கள் படகில் இன்னொருவருடன் ஆற்றைக் கடக்க முன்னூறு வருடப் பிரார்த்தனை தேவை, இதை மேடத்திடம் ஆங்கிலத்தில் சொல்ல நினைப்பார், ஆனால் பிறகு, மொழிகளுக்குள் என்ன இருக்கிறது? மொழிபெயர்த்துச் சொன்னாலும் இல்லாவிட்டாலும் மேடம் அவரைப் புரிந்துகொள்வாள். “நாம் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச - நம்மை இங்கே வந்துசேர்க்க மிக நீண்டகால நற்பிரார்த்தனை தேவை.” என்று அவளிடம் சீனத்தில் சொல்லி முடிப்பார்.
மேடம் ஆமோதிப்பாய் புன்னகைப்பாள்.
”ஒவ்வொரு உறவிற்கும் காரணமிருக்கிறது, அதுதான் அப்பழமொழியின் அர்த்தம். கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தைகள், நண்பர்கள் மற்றும் எதிரிகள், நீங்கள் தெருவில் சந்திக்கும் அறிமுகமில்லாதவர் என. நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவரோடு தலையணையில் அடுத்தடுத்துத் தலைவைத்துப் படுக்க மூவாயிரம் வருட நற்பிரார்த்தனை தேவை. அப்படியென்றால் அப்பாவுக்கும் மகளுக்கும்? ஆயிரம் வருடங்களாக இருக்கலாம். மனிதர்கள் ஒன்றும் தொடர்பின்றி அப்பா-மகள் என்று வந்து முடிவதில்லை, அதுமட்டும் நிச்சயம். ஆனால் என் மகளுக்கு, இது புரிவதில்லை. அவள் அநேகமாக என்னைத் தொல்லையாக நினைக்கக்கூடும். நான் வாயைமூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிறாள், ஏனென்றால் அவள் அப்படித்தான் என்னைப் பார்த்திருக்கிறாள். நான் ராக்கெட் விஞ்ஞானி என்பதால்தான் அவளுடனும் அவள் அம்மாவுடனும் அப்போது அதிகம் பேசவில்லை என்று அவளுக்குப் புரிவதில்லை. எல்லாமே ரகசியம்தான். நாள் முழுதும் வேலை செய்வோம், மாலையானதும் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து நாங்கள் எழுதிய தாள்கள் நோட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஆவணக்காப்பகக் கோப்புகளில் கையெழுத்திடுவோம், அது எங்கள் ஒருநாள் வேலை. என்ன வேலை செய்கிறோம் என்று குடும்பத்திற்குக் கூடச் சொல்லக்கூடாது. பேசக்கூடாதென எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.”
மேடம், இரண்டு கைகளையும் இதயத்திற்கு மேலாக குவித்துக் கேட்டுக்கொண்டிருப்பாள். திரு.ஷி தன் மனைவி இறந்தபிறகு தன் வயதொத்த பெண்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவதில்லை; அவள் உயிரோடு இருக்கும்போதும் அப்படித்தான், அவளிடம் கூட இவ்வளவு பேசியதில்லை. அவர் கண்கள் பாரமாகின. பூமியின் பாதித்தொலைவைக் கடந்து மகளிடம் வந்து, அவள் இளமையில் பேசவிரும்பி இவர் மறுத்துவிட்ட எல்லா பேச்சுகளையும் இப்போது சரிசெய்ய முயன்றார், ஆனால் அவர் கண்டதோ, அவருடைய வார்த்தைகளில் அக்கறை இல்லாத மகள்.
அதேசமயம் மேடம், அவருடைய மொழிகூடத் தெரியாத அந்நியள், அவ்வளவு புரிதலோடு இவர் சொல்வதைக் கேட்கிறாள். திரு.ஷி தன் கண்களை இரண்டு கட்டைவிரலாலும் அழுத்தித் தேய்த்துக்கொண்டார். அவர் வயதிலிருக்கும் ஒரு மனிதர் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளுக்கு இடந்தரக் கூடாது; நீண்ட மூச்சுகளை உள்ளிழுத்துவிட்டு, மெலிதாகச் சிரித்தார். “சந்தேகமின்றி மோசமான உறவுநிலைக்கும் காரணங்கள் உண்டுதானே - நான் ஒரு மகளுக்காக ஆயிரம் ஆண்டுகள் அரைமனதோடு பிரார்த்தனை செய்திருக்க வேண்டும்.”
மேடம் அங்கீகரிப்பாகத் தலையசைத்தாள். அவள் அவரைப் புரிந்துகொள்கிறாள், அவருக்குத் தெரியும், ஆனால் அவர் தன்னுடைய சிறுசிறு துயரங்களால் அவளைச் சுமையாக்க விரும்புவதில்லை.
நினைவுத்தூசுகளை உதற விரும்புவதுபோல் கைகளைத் தேய்த்துக்கொண்டார். “பழங்கதைகள்,” என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னார். “பழங்கதைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை,” என்றார்.
மேடம், “எனக்குக் கதைகள் பிடிக்கும்,” என்று சொல்லிவிட்டுப் பேசத் துவங்கினாள். திரு.ஷி கேட்டுக் கொண்டிருந்தார், அவள் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறாள். அவள் தலையில் உள்ள இளித்துக்கொண்டிருக்கும் குரங்கைக் கவனித்தார், அது அவள் சிரிக்கும்போது முன்னும் பின்னுமாக ஆடியது.
“நாம் அதிர்ஷ்டம் செய்வதவர்கள்தான்,” என்றார் அவள் பேசி முடித்ததும். “அமெரிக்காவில் நம்மால் எதுவேண்டுமானாலும் பேச முடிகிறது.”
“அமெரிக்கா சுதந்திரமான நாடு.” மேடம் ஆமோதித்தாள். “எனக்கு அமெரிக்காவைப் பிடித்திருக்கிறது.”
அன்று மாலை, திரு.ஷி தன் மகளிடம், “அந்த இரானியப் பெண்ணை இன்று பூங்காவில் சந்தித்தேன். நீ சந்தித்திருக்கிறாயா?” என்றார்
“இல்லை.”
“நீ கண்டிப்பாக ஒருமுறை அவளைச் சந்திக்கவேண்டும். அவ்வளவு நேர்மறையான சிந்தனை உடையவள். ஒருவேளை அவள் உன் நிலைமைக்கு ஒளியூட்டுபவளாக உனக்குத் தோன்றலாம்.”
“என்ன என் நிலைமை?” சாப்பாட்டிலிருந்து தலையை உயர்த்தாமலேயே கேட்டாள்.
“நீதான் சொல்லேன்,” என்றார் திரு.ஷி. உரையாடலை மேற்கொண்டு நகர்த்துவதற்கு மகள் உதவி செய்யவில்லை என்றதும் அவர் சொன்னார், “நீ இருண்ட காலத்தில் இருக்கிறாய்.”
“அவள் என் வாழ்வில் ஒளியூட்டுவாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”
திரு.ஷி வாயைத் திறந்தார், ஆனால் பதில் தெரியவில்லை. அவரும் மேடமும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதைச் சொன்னால், மகள் அவரை வயதான பைத்தியக்காரன் என்று முடிவுகட்டி விடுவாள் என்று பயந்தார். ஒருகணத்தில் இயல்பாகத் தெரியும் ஒரு விஷயம் வேறொரு வெளிச்சத்தில் அபத்தமாகத் தெரிகிறது. அவர் தன்மகள் விஷயத்தில் நம்பிக்கை இழந்ததுபோல் உணர்ந்தார், தன்னுடைய மொழிபேசக்கூடிய ஒரே ஆள் ஆனால் அவளும் அன்பான தருணங்களைப் பரிமாறிக்கொள்ளத் தயாரில்லை. வெகுநேர மௌனத்திற்குப் பிறகு, அவர் பேசினார், “ஒரு பெண்ணானவள் இப்படி நேரடியான கேள்விகளைக் கேட்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொள். நல்லபெண் என்பவள் பணிவிணக்கத்தோடு இருப்பவள் மற்றும் மற்றவர்களைப் பேசவைக்கத் தெரிந்தவள்.”
“நான் விவாகரத்தானவள், எனவே உங்கள் கணக்கின்படி நிச்சயமாக நான் நல்லபெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.”
அவள் தேவையில்லாமல் கிண்டலாகப் பேசுவதாக நினைத்து, திரு.ஷி அவள் சொல்வதைப் புறக்கணித்தார், “உன் அம்மா நல்ல பெண்மணிக்கு ஒரு உதாரணம்.”
“அம்மா உங்களைப் பேசவைப்பதில் வெற்றி கண்டாரா?” இதற்கு முன் பார்த்திராத சீற்றத்தோடு இவர் கண்களைப் பார்த்தபடி மகள் கேள்வியெழுப்பினாள்.
“உன் அம்மா இப்படி எதிர்த்துப் பேசமாட்டாள்.”
“அப்பா, முதலில் பேசவில்லை என்றீர்கள். நான் பேச ஆரம்பித்தால், இப்போது தவறாகப் பேசுகிறேன் என்கிறீர்கள்.”
“பேசுவது என்றால் கேள்வி கேட்பது மட்டுமல்ல. பேசுவது என்றால், மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்வது, உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்வதை வரவேற்பது.”
“அப்பா, நீங்கள் எப்போதிருந்து இதில் நிபுணர் ஆனீர்கள்?”
“நான் இங்கிருப்பது உனக்கு உதவத்தான், நான் அந்த விஷயத்தில் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.” என்றார் திரு.ஷி. “உன் வாழ்க்கை விவாகரத்தில் ஏன் முடிந்தது என்று எனக்குத் தெரியவேண்டும். என்ன தவறு என்று தெரிந்துகொண்டு அடுத்தமுறை சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவவேண்டும். நீ என் மகள், நீ சந்தோஷமாக இருப்பதுதான் என் தேவை. நீ இரண்டுமுறை விழுவதை நான் விரும்பவில்லை.”
“அப்பா, இதற்குமுன் நான் உங்களிடம் கேட்கவில்லை, இன்னும் எவ்வளவு நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?”
“நீ சரியாகும் வரை.”
மகள் எழுந்தாள், நாற்காலியின் கால்கள் தரையில் உராய்ந்து கிறீச்சிட்டன.
“நாம் ஒருவருக்கொருவர்தான் குடும்பம் என்று எஞ்சியிருக்கிறோம்,” என்றார் திரு.ஷி, கெஞ்சும் குரலில், ஆனால் அவர் மேற்கொண்டு பேசுவதற்குள் மகள் தன் அறைக்கதவை மூடிக்கொண்டாள். அவள் மிகக்குறைவாக உண்ட உணவுகளின் மிச்சத்தைப் பார்த்தார். சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட காளான், இறால் மற்றும் இஞ்சியிட்ட தோஃபு, பலவித மூங்கில் குருத்துகள், சிவப்பு மிளகு, மொச்சை சேர்த்தது. ஒவ்வொருநாள் மாலையும் மகள் அவருடைய சமையலைப் பாராட்டினாலும் அது அரைமனதாக உள்ளதை அவர் உணர்ந்தார்; சமையல் அவரது பிரார்த்தனையாக மாறிவிட்டதை அவள் அறியவில்லை, எனவேதான் அவள் அதற்குப் பதிலளிக்காமல் போகிறாள்.
மறுநாள் காலை மேடத்திடம் திரு.ஷி “மனைவி இருந்திருந்தால் இவளை நன்றாகத் தேற்றியிருப்பாள்.” என்றார். இப்போதெல்லாம் அவளிடம் சீனமொழியில் பேசுவதையே இயல்பாக உணர்கிறார். “அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். நான் அப்படியில்லை என்று சொல்லமுடியாது. நான் அவர்களை மிகவும் நேசித்தேன். நீங்கள் ராக்கெட் விஞ்ஞானியாக இருந்தால் அப்படித்தான். நாள் முழுதும் கடுமையாக உழைப்பேன், இரவிலும் வேலை குறித்து யோசிக்காமல் இருக்க முடியாது. எல்லாமும் ரகசியமானது என்பதால் நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் குடும்பத்திடம் சொல்லக்கூட முடியாது. ஆனால் என் மனைவி, உலகத்திலேயே அவள்தான் அதிகமான புரிந்துணர்வுள்ள பெண். நான் வேலையிலேயே மூழ்கிக்கிடப்பேன் என்று அவளுக்குத் தெரியும், எனவே அவள் என் சிந்தனையைக் கலைக்கமாட்டாள், மகளையும் அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டாள். ஆனால் அது என் மகளுக்கு நல்லதல்ல என்று இப்போது உணர்கிறேன். வேலையில் மூழ்கிக்கிடப்பதை நான் அலுவலகத்தோடு வைத்திருக்கவேண்டும். இளமையில் அது புரியவில்லை. இப்போது என் மகளுக்கு என்னிடம் பேச ஏதுமில்லை.”
உண்மையில் அது அவருடைய தவறுதான், அவர் எப்போதும் மகளிடம் அளவளாவும் வழக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை. பிறகு, அவர் தனக்குள்ளேயே விவாதிப்பார் - அவர் காலத்தில், அவரைப்போன்ற ஒரு மனிதர், மிகப்பெரிய ஒரு காரியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலரில் ஒருவர், தன் குடும்பத்தைவிட வேலையில்தான் அதிகமான கடமைகள் அவருக்கு இருக்கும். அவர், மரியாதைக்குரியவர் மற்றும் கவலையுடையவர், ஆனால் கவலையுடையவர் என்பதைவிட அதிகமாக மரியாதைக்குரியவர்.
மாலை, உணவுமேசையில் திரு.ஷியின் மகள் அவருக்காக, கிழக்குக் கடற்கரைப்பகுதி மற்றும் மேற்கில் சுற்றுலாக்கள் நடத்தித்தரும் சீனமொழி பேசக்கூடிய ஒரு நிறுவனத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினாள். “நீங்கள் இங்கே அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க வந்தீர்கள். குளிர்காலத்துக்கு முன் நீங்கள் ஒன்றிரண்டு சுற்றுலாவுக்குச் செல்வது நல்லதென்று நினைக்கிறேன்.” என்றாள்.
“அது விலை அதிகமானதா.”
“நான் கொடுப்பேன் அப்பா. உங்கள் பிறந்தநாளுக்கு நீங்கள் விரும்பியது அதைத்தானே?”
என்ன இருந்தாலும் அவள் அவருடைய மகளாயிற்றே; அவருடைய விருப்பத்தை ஞாபகம் வைத்திருக்கிறாள், அதை மதிக்கிறாள். ஆனால் அவள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் அமெரிக்காவைத்தான் அவர் பார்க்க விரும்புகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அவளுடைய கிண்ணத்தில் காய்கறிகளையும் மீனையும் இட்டார். தணிவான குரலில், “நீ நன்றாகச் சாப்பிடவேண்டும்.” என்றார்.
“நாளைக்கு அவர்களுக்குப் பேசி சுற்றுலாவுக்குப் பதிவு செய்துவிடுகிறேன்.” என்றாள்.
“இங்கே தங்கியிருப்பதே போதுமானதென்று நினைக்கிறேன். நான் இப்போது வயதானவன், பயணமெல்லாம் எனக்கு ஒத்துவராது.”
“ஆனால் இங்கே பார்ப்பதற்கு அதிகமில்லை.”
“ஏன் இல்லை? நான் பார்க்க விரும்பிய அமெரிக்கா இதுதான். இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான் உனக்கு அதிகம் தொந்திரவாக இருக்கமாட்டேன்.”
அவள் பதில் சொல்வதற்குள் தொலைபேசி அழைத்தது. அதை எடுத்துக்கொண்டு வழக்கம்போல படுக்கையறைக்குள் நுழைந்தாள். கதவு அறையப்படும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவருக்கு முன்னால் தொலைபேசியில் பேசமாட்டாள், அது யாரென்று தெரியாத அழைப்பு அல்லது தொலைபேசியில் எதையாவது விற்பனை செய்ய முயற்சிக்கும் அழைப்பாக இருந்தால் கூட. சில மாலைகளில் தணிவான குரலில் நெடுநேரம் பேசுவாள், கதவில் காதைவைத்துக் கேட்காமல் இருக்க இவர் மிகவும் முயற்சி எடுக்க வேண்டியதாகும்.
ஆனால் இம்மாலைவேளையில், வேறு முடிவெடுத்தவள் போல, படுக்கையறையின் கதவைத் திறந்தே வைத்தாள். அவள் தொலைபேசியில் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார், இன்று அவளுடைய குரல் அவர் எப்போதும் அறிந்ததைவிடக் கீச்சுக்குரலாக இருந்தது. வேகமாகப்பேசி அடிக்கடி சிரித்தாள். அவள் என்ன பேசுகிறாள் என்று அவருக்குப் புரியவில்லை, அதைவிடவும் அவளது தற்போதைய நடத்தை புரியவில்லை. அவளது குரல், மிகத் தெளிவாக, மிக சத்தமாக, மிகவும் அடக்கமில்லாமல், அவரது காதுக்கு இனிமையற்றதாக இருந்தது, ஒருகணத்துக்கு அவள் நிர்வாண உடலைப் பார்த்துவிட்டது போன்ற உணர்ச்சி, முற்றிலும் அந்நியளாக, அவருக்குத் தெரிந்த மகளல்ல அவள்.
அவள் அறையைவிட்டு வெளியே வந்ததும் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தொலைபேசியின் பெறுவியை அதனிடத்தில் வைத்துவிட்டு, ஏதும் பேசாமல் மீண்டும் உணவுமேசையில் அமர்ந்தாள். அவர் அவளது முகத்தை ஒருகணம் கவனித்துப் பின் கேட்டார், “தொலைபேசியில் யார்?”
“ஒரு நண்பர்.”
“ஆண் நண்பரா அல்லது பெண்ணா?”
”ஆண்.”
மேற்கொண்டு அவள் விளக்குவதற்காகக் காத்திருந்தார், ஆனால் அதற்கான முனைப்பு அவளிடம் இல்லை. சிறிதுநேரம் கழித்து இவரே கேட்டார், “இந்த ஆண் - முக்கியமான நண்பரா?”
“முக்கியம்? ஆமாம்.”
“எவ்வளவு முக்கியம்?”
“அப்பா, அநேகமாக இது என்னைப்பற்றிய கவலையைச் சற்று குறைக்கலாம் - ஆமாம், அவர் மிகவும் முக்கியமானவர்,” என்றாள். “என் காதலர். நீங்கள் நினைத்த அளவுக்கு என் வாழ்க்கை ஒன்றும் மோசமாக இல்லை என்று தெரிந்ததும் உங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறதா?”
“அவன் அமெரிக்கனா?”
“ஆமாம், இப்போது அமெரிக்கர், ஆனால் ருமேனியாவிலிருந்து வந்தவர்.” குறைந்தபட்சம் அவன் ஒரு கம்யூனிச நாட்டில் வளர்ந்திருக்கிறான் என்று திரு.ஷி நேர்மறையாக நினைக்க முயற்சித்தார். “உனக்கு அவனை நன்றாகத் தெரியுமா? அவன் உன்னைப் புரிந்துகொள்கிறானா - நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், உன் கலாச்சாரம் - இவைபற்றி? ஞாபகம் வைத்துக்கொள், ஒரே தவறை நீ இருமுறை செய்யக்கூடாது. நீ மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.”
“நாங்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிவோம்.”
“நீண்ட காலமா? ஒரு மாதம் என்பது நீண்ட காலமல்ல.”
“அதைவிட அதிகமாக அப்பா.”
“அதிகபட்சமாக ஒன்றரை மாதம், சரியா? கவனி, நீ வேதனையில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு பெண் அவசரப்படக்கூடாது, அதுவும் குறிப்பாக உன் சூழ்நிலையில். கைவிடப்பட்ட பெண்கள் - அவர்கள் தனிமையின் காரணமாக நிறைய தவறுகளைச் செய்வார்கள்.”
மகள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். “அப்பா, என் திருமண வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல இல்லை. நான் கைவிடப்படவில்லை.”
திரு.ஷி தன் மகளைப் பார்த்தார், அவள் கண்களில் தீர்மானமும் சுமைத்தணிவும் தெளிவாகத் தெரிந்தன. ஒரு கணத்திற்கு அவள் அவரிடம் வேறெதுவும் சொல்லவேண்டாம் என்றே நினைத்தார், ஆனால் எல்லோரையும் போலவே, அவள் பேச ஆரம்பித்து விட்டால் இவரால் அவளைத் தடுக்க முடியாது. “அப்பா நாங்கள் விவாகரத்து செய்துகொண்டதே இவரால்தான். நீங்கள் அந்தச்சொல்லால் இதைக் குறிக்க விரும்புகிறீர்கள் என்றால், நான்தான் அவரைக் கைவிட்டவள் என்பேன்.”
“ஆனால் ஏன்?”
“திருமண வாழ்வில் தவறுகள் நடக்கும் அப்பா.”
“ஓர் இரவு கணவன் மனைவியாகப் படுக்கையில் இருப்பது நூறு நாட்கள் அவர்களைக் காதலில் வைக்கும். நீ ஏழு வருடங்களாகத் திருமணம் ஆனவள்! நீ எப்படி உன் கணவனுக்கு இதைச் செய்யலாம்? உன் திருமணத்துக்கு வெளியேயான உறவைத் தவிர வேறு என்ன பிரச்சினை?” என்றார் திரு.ஷி. கடைசியில் அவர், தன் மகளை ஒரு விசுவாசமற்றவளாகத்தான் வளர்த்திருக்கிறார்.
“இப்போது அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை.”
“நான் உன் அப்பா. அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை எனக்கு உண்டு.” மேசையில் கையைப் பலமாகத் தட்டியபடி சொன்னார்.
“எங்கள் பிரச்சினை என்னவென்றால், நான் எப்போதும் போதுமான அளவு என் கணவரிடம் பேசியதில்லை. நான் அமைதியாக இருப்பதால், நான் எதையோ அவரிடமிருந்து மறைக்கிறேன் என்று அவருக்குச் சந்தேகம் .”
“நீ அவனிடமிருந்து ஒரு காதலனையே மறைத்திருக்கிறாயே?”
அவர் மகள் அவரது வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் பேசினாள். “அவர் மீண்டும் மீண்டும் என்னைப் பேசச் சொல்லும்போதெல்லாம் நான் மேலும் மேலும் அமைதியாகவும் தனிமையாகவும் ஆனேன். நீங்கள் சொன்னது போல நான் பேசுவதில் தேர்ந்தவளல்ல.”
“ஆனால் அது பொய். இப்போது தொலைபேசியில் வெட்கமில்லாமல் பேசினாயே! பேசினாய், சிரித்தாய், ஒரு விலைமாதைப்போல!”
திரு.ஷியின் மகள், அவர் வார்த்தைகளின் தீவிரத்தால் நிலைகுலைந்து போனாள், வெகுநேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மெல்லிய குரலில் பேசினாள். “அது அப்படியில்லை அப்பா. நாங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறோம், எனவே அது சுலபமானது. என்னால் சீனமொழியில் அவ்வளவு நன்றாகப் பேசமுடியாது.”
“இதுவொரு அபத்தமான காரணம்!”
“அப்பா, நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைச் சொல்ல உபயோகிக்காத ஒருமொழிக்கு இடையில் வளர்ந்தால், இன்னொரு மொழியைத் தேர்ந்தெடுத்து அம்மொழியில் அதிகம் பேசுவது சுலபம். அது உங்களைப் புதுமனிதராக்கும்.”
“நீ செய்த தவறுக்கு என்னையும் உன் அம்மாவையும் காரணமாகச் சொல்கிறாயா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை அப்பா!”
“ஆனால் நீ சொல்வதற்கு அர்த்தம் அதுதானே? நாங்கள் உனக்குச் சீனமொழி நன்றாக வருவதற்குச் செய்யவேண்டியவற்றைச் செய்யவில்லை என்பதால் உன் கணவனிடம் நேர்மையாக உன் திருமணவாழ்க்கை குறித்துப்பேசாமல் நீயாகவே உனக்கு ஒரு புதிய மொழியையும் புதிய காதலனையும் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.”
“உங்கள் இருவருக்குமே உங்களுடைய மணவாழ்க்கையில் பிரச்சினை இருப்பது தெரிந்தும் நீங்கள் பேசிக்கொண்டதே கிடையாது, அம்மாவும் பேசியதில்லை. நானும் பேசாமலிருக்கக் கற்றுக்கொண்டேன்.”
“உன் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்சினை வந்ததே இல்லை. நாங்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.”
“ஆனால் அது பொய்!”
“இல்லை, அது பொய்யில்லை. நான் என் வேலையில் அளவுக்கதிகமாக மூழ்கியிருக்கும் தவறைச்செய்தவன் என்று எனக்குத்தெரியும், ஆனால் என் வேலையின் தன்மை காரணமாகத்தான் நான் அமைதியாக இருந்தேன் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும்.”
“அப்பா,” திரு.ஷியின் மகள் கண்களில் பரிதாபம் வெளிப்படப் பேசினாள். “இது பொய் என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் எப்போதும் ராக்கெட் விஞ்ஞானியாக இருந்ததில்லை. அம்மாவுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும்.”
திரு.ஷி தன் மகளை வெகுநேரம் வெறித்துப்பார்த்தார். “நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை.”
“உங்களுக்குத் தெரியும் அப்பா. நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று நீங்கள் பேசியதில்லை, உண்மைதான், ஆனால் மற்றவர்கள் - மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வார்களே.”
திரு.ஷி தன்னைத் தற்காத்துக்கொள்ள வார்த்தைகளைத் தேடினார், ஆனால் உதடுகள் சத்தமில்லாமல் நடுங்கின.
“என்னை மன்னியுங்கள் அப்பா, உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை.”
திரு.ஷி ஆழ்ந்து பெருமூச்சு விட்டு, தன் மதிப்பைத் தக்கவைக்க முயற்சித்தார். அது ஒன்றும் கடினமல்ல, அவர் தன் வாழ்க்கை முழுக்க தனக்கு நிகழ்ந்த பேரழிவுகள் குறித்துப் பேசியதே இல்லை. “நீ என்னைக் காயப்படுத்தவில்லை. நீ சொன்னதுபோல உண்மையைத்தான் பேசினாய்,” என்று சொல்லி எழுந்து நின்றார். விருந்தாளிகள் தங்கும் அறைக்கு அவர் திரும்பும் முன் அவர் பின்னே மகள் அமைதியாகச் சொன்னது கேட்டது, “அப்பா, நாளை உங்கள் சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்துவிடுகிறேன்.”
திரு.ஷி பூங்காவில் அமர்ந்தபடி மேடத்திடம் விடைபெறக் காத்திருந்தார். மகளிடம், அமெரிக்கச் சுற்றுலாக்கள் முடிந்ததும் சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து கிளம்புவதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறியிருந்தார். கிளம்புவதற்கு இன்னமும் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தாலும், மேடத்தைக் கடைசியாக ஒரேயொருமுறை சந்திக்கும் தைரியம் மட்டுமே அவரிடம் இருந்தது, அப்போது தன்னைப்பற்றிச் சொன்ன பொய்களைச் சரிசெய்துவிட வேண்டும். அவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானியல்ல. அவர் அதற்கான பயிற்சி எடுத்தார், நிறுவனத்தில் வேலைசெய்த முப்பத்தெட்டு வருடங்களில் மூன்று வருடங்கள் மட்டுமே அப்பணியில் இருந்தார். இளம்வயதில் தன் வேலைபற்றிப் பேசாமல் அமைதியாக இருப்பது கடினம், திரு.ஷி மனதுக்குள் மறுபடி மறுபடி கூறிக்கொள்வார். ஒரு இளம் ராக்கெட் விஞ்ஞானி, எவ்வளவு பெருமையும் புகழும் உள்ளது அது. நீங்கள் அந்த உற்சாகத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.
நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு, திரு.ஷி விஷயத்தில் அந்த யாரோ என்பது, இருபத்தைந்து வயதான, நேரக்காப்பாளராக இருந்த ஒரு பெண்ணாக அமைந்தது. அப்போது அவர்கள் நேரப்பதிவர் என்றழைக்கப்பட்டனர், வெகுகாலம் முன்பே அவ்வேலை கணினிகளால் நிரப்பப்பட்டுவிட்டது, ஆனால் வாழ்விலிருந்து மறைந்துவிட்ட எவ்வளவோ விஷயங்களில் அவர் இல்லாக்குறையாக உணர்ந்தது இந்த நேரப்பதிவர்களைத்தான். அவருடைய நேரப்பதிவர். “அவள் பெயர் யிலன்,” திரு.ஷி காற்றுக்கு அப்பெயரை உரத்துச் சொன்னார், யாரோ அந்தப்பெயருக்கு முகமன் கூறிச் சென்றார்கள். மேடம் அவரை நோக்கி இலையுதிர்கால இலைகள் நிரம்பிய கூடையுடன் வந்தாள். அதிலிருந்து ஒன்றையெடுத்து “அழகானது” என்று சொன்னபடி திரு.ஷியிடம் அளித்தாள்.
திரு.ஷி இலையை ஆராய்ந்தார், மெல்லிய கிளைவிட்ட அதன் நரம்புகள், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பின் வெவ்வேறு சாயைகள். உலகத்தை இவ்வளவு உன்னிப்பான விவரங்களோடு இதுவரை அவர் கவனித்ததில்லை. தனக்கு மிகவும் பழக்கமான, மிருதுவாக்கப்பட்ட முனைகளை, மங்கலான நிறங்களை நினைத்துக்கொள்ள முயற்சி செய்தார், ஆனால் கண்புரை நீக்கப்பட்ட நோயாளிபோல எல்லாமும் துல்லியமாகவும் வெளிச்சமாகவும், திகைக்கும்படி இருந்தாலும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. “நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்,” என்றார் திரு.ஷி, மேடம் ஆர்வமான புன்னகையொன்றை வீசினாள். திரு.ஷி இடம்மாறி அமர்ந்துகொண்டார், பின் ஆங்கிலத்தில், “நான் ராக்கெட் விஞ்ஞானியில்லை,” என்றார்.
மேடம் வேகமாகத் தலையசைத்தாள். திரு.ஷி அவளைப் பார்த்துவிட்டு, வேறுபக்கம் பார்வையைத் திருப்பினார். “நான் ராக்கெட் விஞ்ஞானியாக இல்லாமல் போனதற்கு ஒரு பெண்தான் காரணம். நாங்கள் செய்த ஒரே விஷயம் பேசிக்கொண்டதுதான். பேசுவதில் என்ன தவறு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இல்லை, ஒரு திருமணமான ஆண் மற்றும் திருமணமாகாத பெண்ணிற்கிடையே பேச்சு அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் காலம் அவ்வளவு சோகமான காலமாக இருந்தது.” ஆமாம், சோகம் என்பதுதான் சரியான வார்த்தை, இப்போதைய இளைஞர்கள் அக்காலத்தைக் குறிப்பிடுவதுபோல அது முட்டாள்தனமான காலமல்ல. “பேசுவது எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, ஒருவன் எப்போதும் பேசவிரும்புவான்தானே.” மேலும் பேசுவதென்பது எவ்வளவு சாதாரணமான விஷயம், ஆனால் மனிதர்கள் எப்படியெல்லாம் அதற்கு அடிமையாகிறார்கள்! அவர்களது பேச்சு அலுவலகத்தில் தரப்படும் ஐந்து நிமிட இடைவேளையில் தொடங்கியது, பிறகு அவர்கள் உணவு இடைவேளை முழுவதும் காஃபி பருகும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். தாங்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வான, கம்யூனிசத் தாய்க்கு முதல் ராக்கெட்டைத் தயாரித்துக் கொடுக்கும் அச்செயலின் நம்பிக்கை மற்றும் அதீத மகிழ்ச்சி குறித்துப் பகிர்ந்து கொண்டார்கள்.
“ஒருமுறை நீங்கள் பேச ஆரம்பித்தால், மேலும் பேசுவீர்கள், மேலும் மேலும். அது வீட்டிற்குச் சென்று உங்கள் மனைவியிடம் பேசுவதிலிருந்து வேறுபட்டது, ஏனென்றால் இங்கே நீங்கள் எதையும் மறைக்க வேண்டியதில்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினோம். உண்மையில் நாங்கள் எங்கள் சொந்த வாழ்வைப்பற்றித்தான் பேசினோம். பேசுவதென்பது கடிவாளமற்ற குதிரையில் பயணிப்பது போல, நீங்கள் எங்கே செல்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது, அதைப்பற்றி நீங்கள் நினைக்க வேண்டியதும் இல்லை. எங்கள் பேச்சும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அவர்கள் சொன்னதுபோல் எங்களுக்குள் உறவெல்லாம் இல்லை. எங்களுக்குள் காதல் எப்போதுமே இருந்ததில்லை,” என்றார் திரு.ஷி, ஆனால் சில கணங்களுக்குத் தன் வார்த்தைகளை நினைத்துக் குழம்பினார். என்ன மாதிரியான காதலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்? நிச்சயமாக அவர்கள் காதலில்தான் இருந்தனர், அவர்கள் சந்தேகப்பட்டது மாதிரியான காதலல்ல அது - எப்போதுமே மரியாதையான ஒரு தூரத்தைக் கடைபிடித்தார், அவர்களின் கைகள் தொட்டுக் கொண்டதேயில்லை. ஆனால் சுதந்திரமாகப் பேசிக்கொண்ட ஓர் அன்பு, மனங்கள் தொட்டுக்கொண்ட அந்த அன்பு - அது காதலில்லையா? அவர் மகளும் அப்படித்தானே தன் திருமணத்தை முடித்துக் கொண்டிருக்கிறாள், இன்னொரு மனிதனுடனான தொடர் பேச்சினால்தானே? திரு.ஷி மாறி அமர்ந்து கொண்டார், அக்டோபர் மாத குளிர்காற்றையும் மீறி அவருக்கு வியர்த்தது. அவர்கள் குற்றம் சாட்டப்பட்டபோது, தாங்கள் நிரபராதிகள் என்று அழுத்தமாகச் சொன்னார்; அவள் மாகாணத்தின் வேறு நகரத்துக்கு மாற்றப்பட்டபோது அவளுக்காக முறையீடு செய்தார். அவள் ஒரு நல்ல நேரப்பதிவாளர், ஆனால் நேரப்பதிவாளர்களே எப்போதும் பயிற்சியளிக்கச் சுலபமானவர்கள். ஆனால், அவர் பொதுவில் தனக்கு உறவிருந்ததை ஒப்புக்கொண்டு தன் தவறை உணர்ந்தால் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்படுவார் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தான் தவறாகக் குற்றம் சாட்டப்படுவதாக நினைத்ததால் அவர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். “நான் முப்பத்தியிரண்டு வயதிலிருந்து ராக்கெட் விஞ்ஞானியாக இல்லை. அதன்பிறகு எந்த ஆராய்ச்சியிலும் நான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை, ஆனால் என் வேலையில் எல்லாமே ரகசியம் என்பதால் மனைவிக்கு இதெல்லாம் தெரியாது.”
குறைந்தபட்சம் முதல்நாள் இரவுவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார். அவரளவுக்குப் பயிற்சி பெற்றவர்கள் வகிக்கக்கூடியதிலேயே கீழான பதவியை அவருக்குக் கொடுத்தார்கள் - அதிகாரி மாவோவின் பிறந்தநாளுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் அலுவலகத்தை அலங்கரிப்பார்; அலுவலகத்திற்குள் ஒரு குழுவிலிருந்து மற்ற குழுவிற்கு ஆராய்ச்சிக் கோப்புகளை வண்டியில் வைத்து நகர்த்திச்செல்வார், மாலையில் உடன் வேலை பார்ப்பவர்களின் குறிப்பேடுகளையும் தாள்களையும் சேகரித்துப் பதிவுசெய்து, இரண்டு காவலர்கள் முன்னிலையில் அவற்றை அதற்கான அலமாரியில் வைத்துப் பூட்டுவார். வேலையிடத்தில் தன் கண்ணியத்தைத் தக்கவைத்துக்கொண்டார், வீட்டில் மனைவியிடம், அமைதியாக, யோசனையிலேயே இருக்கும் ராக்கெட் விஞ்ஞானியாகப் போய்ச்சேருவார். தன் மனைவி கண்களில் தேக்கியிருக்கும் கேள்விகள் ஒருநாள் மறைந்து போகும்வரை அவள் பார்வையைத் தவிர்த்தார்; மனைவியைப் போலவே தன் மகளும் அமைதியானவளாக, புரிதலுள்ளவளாக, நல்ல சிறுமியாக, நல்ல பெண்ணாக வளர்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தன் வேலையில் முப்பத்தியிரண்டு காவலர்களோடு வேலை பார்த்துவிட்டார், சீருடையோடு காலியான துப்பாக்கி உறைகளை பெல்ட்டில் அணிந்த இளைஞர்கள், ஆனால் துப்பாக்கியில் இருந்த கத்தி உண்மையானது.
அப்போது அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர் எடுத்த முடிவு - அது தன் மனைவிக்கும் அந்தப்பெண்ணுக்கும் விசுவாசமான முடிவல்லவா? எப்படி அவரால் உறவுண்டு என ஒப்புக்கொள்ள முடியும், தன் நல்ல மனைவியை நோகடித்து, சுயநலவாதியான ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க முடியும் - அல்லது இன்னமும் சாத்தியமே இல்லாத வழியான, வேலையை, மனைவியை, இரண்டு வயதுக் குழந்தையைத் துறந்து, அவ்வளவு பிரகாசமற்ற ஆசையினால் இன்னொரு பெண்ணோடு வாழ்வைக் கழிக்கத்தான் முடியுமா? திரு.ஷி பயிற்சியின்போது அடிக்கடி சொல்லப்படும் வாக்கியத்தைச் சொன்னார் - “நம் தியாகம்தானே வாழ்வை அர்த்தப்படுத்துகிறது”. தலையைப் பலமாக உலுக்கிக்கொண்டார். வெளிநாடு வித்தியாசமான ஒருசிந்தனையைத் தருகிறது என்று நினைத்துக்கொண்டார். அவரைப்போன்ற வயதானவர்கள் பழைய நினைவுகளில் அதிகமாக உலவிக் கொண்டிருப்பது நல்லதல்ல. நல்ல மனிதர் என்பவர் நிகழ்காலத்தில் இருக்கவேண்டும், அதுவும் மேடம் போல ஒரு நல்லதோழி அருகில், அழகான ஒரு தங்கநிற ஜின்கோ இலையைக் கையில் வைத்து அவர் பார்ப்பதற்காக வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்தபடி இருக்கையில்.
யியூன் லீ (Yiyun li) - பெய்ஜிங்கில் பிறந்த யியூன் லீ தற்போது வசிப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில். இவரது படைப்புகள் Newyorker, The paris review ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. Frank O’ Corner, Mc Arthur fellow, Granta, PEN/Hemingway award உட்படப் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். இச்சிறுகதை 2005-ல் வெளியான இவருடைய முதல் தொகுப்பின் தலைப்புச் சிறுகதை.
நடுகல் இதழ் 1 ல் வெளிவந்த கதை
0 Comments