Tamil Sanjikai

நட்பாய் நாலு வார்த்தை பேசி
அன்பாய் காதல் சாயம் பூசி
தப்பாய் நடப்பாயா ஆண் வேசியே?

உன் தொடை நடுவே பசிக்க
நானா கிடைத்தேன் ருசிக்க?
காமமேறிய பசியெனில்
உன் வீட்டுச் சேலைகளிலேயே
முடித்திடு..
இல்லையேல் சுத்தியெடுத்து
உன் கத்தியை நீயே
அடித்திடு..

மகளிர் தினமெனில் வாழ்த்தாம்!
அன்னை தினமெனில் நடிப்பாம்
வாழ்த்தெல்லாம் வேண்டாமடா!
வாழவிட்டாலே போதுமடா..!

பெண்ணுடல் புனிதமென
கற்பித்துக் கற்பித்தே
எங்களைக் கர்ப்பித்தாய்..
புனிதம் கெடுமென
கோயிலில் நடை அடைத்தாய்..
தொட்டில் முதல் பாடை வரை
பெண்ணுடல் ஒன்றேயென விழி கொண்டாய்..
அதற்கான பழி தந்தாய்.. வலி தந்தாய்..
பெண்ணாய் பிறத்தலே பெரும் பாவமென
நினைக்க செய்தாய்..

தாயே அம்மனே! காளியே காதலே !எனவெல்லாம்
எங்களுக்கு கொண்டாட்டம் வேண்டாம்..
எங்களை நாங்களாய் இருக்க விடுங்கள்..
பெண்ணை பெண்ணாய் வாழ விடுங்கள்..

- அகிலன்

0 Comments

Write A Comment