Tamil Sanjikai

கைகளுக்கு அருகிலிருந்து வானத்தைப் பிடித்து
விளையாடினார்கள் குழந்தைகள்
விண்மீன்களைப் பூக்களாய்ப்
பறித்து வீசி எறிந்தார்கள்
நிலாவைப் பந்தடித்தார்கள்
சூரியச் சுடர் கொளுத்தி
மத்தாப்பாய் மகிழ்ந்தார்கள்
அவர்கள் முதல் பொய் சொன்ன போது
வானம் தலைக்கு மேல் போனது
முதல் கோள் மூட்டல் நிகழ்ந்த போது
பனை மர உயரத்துக்குப் போனது
மனிதர்களாய் வளர்ந்து முதல் முறையாகத்
திட்டிக் கொண்ட போது
மலையளவு உயரத்துக்குப் போனது
முதல் முறையாக ரத்தம் வடியும் அளவுக்கு
அடித்துக் கொண்ட போது
பயந்து போய் பல மைல் தூரம் ஓடிப் போனது
அப்புறம் அரிவாள், வேல்கம்பு, துப்பாக்கி, அணுகுண்டு
என ஆன பிறகு
எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டே இருக்கிறது வானம்

-விகடபாரதி

0 Comments

Write A Comment