Tamil Sanjikai

தன் சுண்டு விரல் அசைவில் அவனை இல்லாமல் செய்கிறாள்.
தன் விழிப் பரப்பையே அவன் உலகாக்கினாள்.
தன் கைத்துப்பாக்கியால் அவனை தினம் கொல்கிறாள்.
அவன் உண்டிக்கலயம்தான் அவள் ஆசனம்!
அவன் நெஞ்சில் காலூன்றி அவன் குரல்வளை நெரிக்கிறாள்!
முத்தத்தின் பெயர் கூறி அவன் முகத்தில் எச்சில் செய்கிறாள்.
தன் உலகின் வண்ணங்களால், அவன் புதுச்சட்டைக்கு பொங்கலிடுகிறாள்!
தன் கணவனின் கைப்பிடித்து அவள் செல்கையில்
அவனுக்கு சொல்லத் தோன்றியது ;
மீண்டும் வந்தென்னை தொல்லை செய் ராட்சஸியே !
போய் வருகிறேன் அப்பா! என்று
இப்போதும் அவள்தான் குரலுடைத்தாள்,
கல் நெஞ்சன்... வாய் திறக்கவில்லை!
கொடுத்தனுப்பிய இறுதி முத்தம்,
யூதாஸாய் சுட்டது அவனுக்கு!
ஒருமுறையேனும் சொல்லியிருக்கலாம்.
மீண்டும் வந்தென்னைத் தொல்லை செய் என் மகளே என்று!
ராட்சஸிகள் அகன்று போவது அத்தனை எளிதானதல்ல !
தூக்கம் பறிக்கும் பெருந்துக்கம் !

- பினோ செல்வராஜ்

0 Comments

Write A Comment