இந்த பூமி உருண்டை
வேர்களற்றதாய் இருந்து தொலைத்திருந்தால்
இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
பிடுங்கி வீசி எறிந்திருக்கலாம்.
நதிகளின் ஓலம் கேட்டு
நள்ளிரவின் நட்சத்திரங்கள் நகைக்கின்றன.
ஏரிகளின் அலறல் கேட்டு
அவை எரிநட்சத்திரங்களாய்
புவியைத் துளைக்கின்றன.
குளங்களின் குற்றங்களுக்கு
குழிதோண்டியா புதைப்பீர்கள் ?
நீரற்ற நிலத்தில்
நற்புவியின் நற்குணங்களறியா
நன்றிகெட்ட நரப்பதர்காள்
இவ்வுலகம் உங்களுக்கு மட்டுமானதல்ல!
பட்சிகளும், பூச்சிகளும்,
வண்டுகளும், வானரங்களும்
உணணாமல் உறங்காமல்
நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
அவைகளின் கடைசி மூச்சிக்காற்று
வரையிலும் விற்கப்பட்டதை
அவைகள் அறிந்திருக்கவில்லை...
மனிதன் விற்று மனிதம் கொல்லப்பட்டதை
மனிதனே அறிந்து கொள்ளவில்லை...
நிலம் விற்று, நீர் விற்று,
காற்று விற்று, கடல் விற்று
எதை வாங்கப் போகிறீர்கள் வியாபார முண்டங்களே !
நீரற்ற, நிலையற்ற, காற்றற்ற, கருணையற்ற
கபட நிலம் உங்களைப் பார்த்து
புன்முறுவல் பூக்கும் !
உங்கள் பசப்பு ஆன்மா சாந்தியடையட்டும்!
- பிரபு தர்மராஜ்
0 Comments