Tamil Sanjikai

இருபத்திரண்டு வயதில்
இனிப்பு அல்வா தந்தப்போ..
இளையவன் சாப்பிடுவான்னு
எடுத்து அத தள்ளி வச்ச..!!!!!
முப்பத்தியோரு வயதில்
முந்திரி கொத்து தந்தப்போ..
மூத்தவனுக்கு பிடிக்கும்னு
முந்தானையில் முடிஞ்சு வச்ச...!!!!
முப்பத்தெட்டு வயதில்
முறுக்கொன்னு தந்தப்போ
நறுக்குன்னு கைய தட்டி
எனக்கே ஊட்டி விட்ட....!!!!
நாப்பதிலும் ஐம்பதிலும்
நா ருசிக்க தந்ததையெல்லாம்
பேரனுக்கும் பேத்திமார்க்கும்னு
பேப்பரோட எடுத்து வச்ச...!!!!
நாடி தளர்ந்து நாவு உலர்ந்து
தூக்கி வளர்த்த பிள்ளைக
இப்ப தூர பிரிஞ்சு வாழுறப்ப,
ஆசையா கேக்கிற
"கடலை முட்டாய் வேணும்னு"...
காலம் போன கடைசியில்
கடலை மிட்டாய் வேணுமுங்க...,
கிழவியே ஆனாலும் கேட்காதவ கேட்டிட்ட..!!!
பல்லில்லா கிழவி நீ...
சொல்லால சாச்சிட்ட..!!!
கடை வரைக்கும் நான் போயி
கடலை முட்டாய் வாங்கியாரேன்...
அது வரைக்கும் அடியே நீ..,
ஆசைகளை அடக்கி வை...!!
ஆயுளையும் புடிச்சி வை..!!
காக்கா கடி கடிச்சு
கடலை முட்டாய் தின்னாத்தான்..
ஒத்தையில செத்தாலும்
கட்டையில தேகம் வேகும்..!!!!

- தெரிசை சிவா

0 Comments

Write A Comment