Tamil Sanjikai

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.

அந்த வகையில் சமீபத்தில் அவரின் "நீலம் பண்பாட்டு மையம்" ஒருங்கிணைத்து நடத்திய "வானம் கலைத் திருவிழா" மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" மற்றும் "ரூட்ஸ் 2" குழுவினர் ஒருங்கிணைத்த "ஒரு ஒப்பாரி ஷோ" நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒப்பாரியானது, முதல் முறையாக ஒரு பொது மேடையில் அரங்கேறியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்நிகழ்ச்சியில்
சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஒப்பாரிக் கலைஞர்கள் பங்குபெற்று பாடினார்கள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்து பார்க்க வந்திருந்த பார்வையாளர்களைத் தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தவர்களும் இருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், பங்குபெற்ற இசைக் கலைஞர்களுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கௌரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய "மியூசிக் அகாடமி" நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முதல் முறையாக ஒப்பாரியை ஒரு பெரிய மேடையில் பார்த்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் இதுபோல நிகழ்ச்சிகளை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்க வேண்டுமென நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் வைத்தனர்.

0 Comments

Write A Comment