Tamil Sanjikai

நம்முடைய அப்பன், பாட்டன் காலத்தில் வீட்டிற்கு ஐந்தாறு பிள்ளைகள் இருந்த போதிலும், அவர்களது வருமானம் மிகவும் குறைவாக இருந்த போதிலும், கடன் சுமை இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். ஏனென்றால் அவர்களது தேவை மிகவும் குறைவாகவே இருந்தது. தேவைக்கதிகமான ஆசை இல்லாதவர்களாக, குறைவில் நிறைவை காண்பவர்களாக இருந்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டங்களில் என்னதான் அவர்களை விட அதிகமாக சம்பாதித்தாலும் ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என நமது தேவைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கூடவே ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட் என்று ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்’னு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியைத் தேடி பார்ட்டி, வெளிநாட்டு பயணங்கள், சினிமா என்று எவ்வளவு பணத்தை விரயம் செய்தாலும் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர்தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009 ஆம் ஆண்டு இவர்கள் இருவருமே நிறைய சம்பாதிக்கின்ற ஹைக்ளாஸ் ஐ.டி இளைஞர்கள். தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லா வசதிகளும் பெற்று இருந்தனர் ஆனால், ஏதோ ஒன்று குறைவதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களின் வாழ்வில் வெற்றிடம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்கள். வாரத்தில் சுமார் எண்பது மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை புரிந்து கொண்டார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் `மினிமலிசம்' என்கிற கான்செப்ட் பிறக்கிறது.* இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாச்சாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம். இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும்.

2009 ஆம் ஆண்டு தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக் கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றால் கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை. அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வதே மினிமலிஸம் ஆகும்.

உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும்.இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த அவசியமில்லா நுகர்வுதான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு?

நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற அல்லது பயன்படுத்துகிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான். உபயோகமேயில்லாமல் உங்கள் வீட்டில் ஒரு கிலோ தங்கம் இருந்தாலும் அது குப்பைதான்.

மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்' என்பது ஜோஷூவாவின் கருத்து.

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம் வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழியேதான் அவர்கள் தங்களுடைய வாழ்வை நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். அதற்கு வாரன் பஃபெட் ஒரு நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். `தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்' என்கிறார் பஃபெட். அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன என்பதற்கு ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல்:-

மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 - குறைவான பொருள்களில் வாழ்வது:-

வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும். அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசியமில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல்:-

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது:-

எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு முன் இது எனக்கு அவசியம்தானா... ? இது இல்லாமல் வாழ முடியுமா...? முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது:-

உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள். அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும். கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும்கூட சிறப்பாக வாழமுடிந்தது.

0 Comments

Write A Comment