Tamil Sanjikai

மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயின் நேர்காணல்

தமிழிலக்கியப் பரப்பில் மலையாள மொழிபெயர்ப்புக்கென தனி இடத்தை அடைந்திருப்பவர் கே.வி.ஜெயஸ்ரீ. மலையாளத்தில் இருந்து இவர் மொழிபெயர்க்கும் படைப்புகளுக்குத் தமிழில் பெரும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் பால்சக்காரியா கதைகள், மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், சந்தோஷ் ஏச்சிகானத்தின் கதைகள் தமிழ் வாசகப் பரப்பில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, நல்லி திசைஎட்டும் விருது, தினமணி - என்.எல்.சி. சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது என பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரிடம் உரையாடியதில் இருந்து...

மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

நான் உணர்ந்தவரை வட்டார மொழிச்சிக்கல் மட்டுமே இருக்கிறது. உதாரணமாக, திருச்சூர் வட்டார மொழி தமிழகத்தின் எந்த வட்டார மொழியோடும் ஒப்பிடவே முடியாத ஒரு சவால்தான். அதுபோலவே கேரள முஸ்லீம் மக்களின் கோழிக்கோட்டு மலையாளம் ஒரு சிக்கலாகப் பார்க்கிறேன். வேறு வகையான சிக்கல்கள் எனக்கு இதுவரை நேரிட்டதில்லை.

பெண் இலக்கியவாதிகள் பெரும்பான்மையாக சாகித்ய அகாதமி விருது பெறாததற்கு காரணம் என்ன?

தமிழ் சாகித்ய அகாதமி அறிவிக்கப்பட்ட 1955-ம் ஆண்டு முதல் இன்றுவரை மூன்று பெண் படைப்பாளிகள்தான் அவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள். இது மிகுந்த வேதனை தரக்கூடிய விஷயம்தான். ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடாகவே இதை நான் காண்கிறேன். இந்தக் காலந்தோறும் பெண்ணெழுத்தும் இருந்துதானே வந்திருக்கிறது. என்னதான் பெண் முன்னேற்றம் அடைந்துவிட்டாள், விடுதலை பெற்றுவிட்டாள் என்றெல்லாம் சொன்னாலும் அறிவுத் தளத்தில்கூட பெண்ணுக்கான இடம் இவ்வளவு கீழாக இருப்பது வருந்தத்தக்கதுதான். சங்ககாலத்தில் கூட பெண்பாற் புலவர்கள் 44 பேர் இருந்தார்கள் என அறிகிறோம். அறிவுத் தளத்தில் மிக மேலோங்கி இருக்கும் இக்காலத்திலும் என்ன நிலைமை என்று பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. செல்ல வேண்டிய தூரம் கண்ணுக்கெட்டாததாக இருப்பதையே இது காண்பிக்கிறது.

திரையில் ஜொலித்த நடிகர்கள் இப்போது அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகம் முழுவதும் திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வருவதும், இந்திய அளவிலும் அது தொடர்ந்து வருவதும் இயல்பானதாகவே இருக்க தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கன்னட ராஜ்குமார், ஆந்திர என்.டி . ஆர், தமிழக எம்.ஜி.ஆர் தொடர்ச்சியில் தமிழ்த்திரையுலகின் நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவர்கள் மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். திரையில் தோன்றி வசனம் பேசுவது போலல்ல அரசியல் செய்வது என்பதை உணர்ந்து அவர்கள் நன்மையைச் செய்யக்கூடிய அரசியல்வாதியாக மாறுவதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மலையாளத்தில் இருந்து அதிகமான படைப்புகள் தமிழுக்கு வருகிறது. அதே அளவு தமிழில் இருந்து மலையாளத்துக்குப் போகிறதா?

இல்லை. மிகச் சமீபமாக வெளியிடப்படும் மலையாளப் புத்தகங்கள்கூட தமிழுக்கு உடனடியாக மொழிபெயர்க்கப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்ப் படைப்புகள் மலையாளத்திற்குச் செல்வதில் மிகுந்த தொய்வே காணப்படுகிறது. நூறு படைப்புகள் வரை தமிழில் எழுதியிருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு படைப்புகூட இன்றுவரை மலையாளப் படுத்தப்படவில்லை. மலையாள இலக்கியவாதிகளுடனான உரையாடலின் முடிவில், அம்முயற்சியையும் தமிழ்ப் படைப்பாளிகளே மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது புரிகிறது. ஆனால் அது இயலாத காரியம். அவர்களே மேற்கொள்ள வேண்டிய செயலும் கூட.

அரசுப்பள்ளி ஆசிரியர் என்ற விதத்தில் தமிழக அரசின் புதிய பாடத் திட்டங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம்?

இத்தனை ஆண்டுகாலத் தமிழகப் பாடத்திட்ட வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பாடத்திட்டமாக இதை நான் கருதுகிறேன். பல்வேறு நாடுகளின் பாடத்திட்டங்களையும் பல மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு நம் மாநிலப் பாடத்திட்டத்தின் நிறைகுறைகளையும் ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொழிப்பாடங்களில் இனி வெறும் மனப்பாடம் செய்ய வைப்பது, கேள்விக்கான பதில் தருவது என்றில்லாமல் படைப்பூக்கம் சார்ந்த பயணம் தேவைப்படும். மாணவர்களைவிட ஆசிரியர்கள் என்றும் ஒரு தேடலுடன் முன்னேற வேண்டியது இப்பாடத்திட்டத்தில் அவசியமாகிறது.

இலக்கியம் எதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறதென்று சொல்ல முடியுமா?

எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்வார், இலக்கியம் வாசிப்பவன் மற்றவர்களைவிட சற்றே யோக்கியனாக இருப்பானென. சிறுமை கண்டு பொங்கவும், சற்றே யோக்கியமானவளாக இருக்கவும் இலக்கியம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்த உங்கள் பார்வை என்ன?

உலக மொழிகள் அனைத்தையும் நம்மால் கற்றுக்கொண்டுவிட முடியது. ஆனால் பிறமொழி இலக்கியங்கள், பிறமொழிச் செய்திகள், உலக வரலாறு, சமூகம், பண்பாடு, அரசியல் என இவற்றை நாம் அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு அவசியமாகிறது. இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த மனித குலத்தின் மொழி, அந்தந்த இனக்குழுவுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த காலத்தைக் கடந்து, மற்ற இனக்குழுக்களோடு இணையும் காலகட்டத்தில் மொழிபெயர்த்தல் என்பது தோன்றியிருக்க வேண்டும். எனில் மொழியின் பழமை போன்றே மொழிபெயர்ப்பும் மிகப் பழமை வாய்ந்ததே. அடுத்த காலகட்டமாக உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த பயணிகள் வாயிலாக, மொழிபெயர்ப்பு நிகழ்ந்திருக்கலாம். இபின் பதூதா, யுவான் சுவாங், பாகியான் போன்ற பயணிகளின் குழுவினர் உலகின் பல பகுதிகளுக்கும் மொழிகளைக் கடத்திவிட்டுக் கொண்டிருந்து இருப்பார்கள். ஊர்சுற்றிகளால் கொண்டு செல்லப்பட்ட மொழிகள் நாடுகள் கடந்து கண்டங்களுக்கும் சென்றிருக்கும். அப்படியான மொழி வல்லோர்களாலேயே அந்தந்த நாட்டின் மொழி மொழிபெயர்க்கப்பட்டு கலைச் செல்வங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். உலக அளவில் எழுத்தாளர்கள் அனைவரும் முதலில் மொழிபெயர்ப்பாளர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எழுத்தாளருக்கு இருக்கும் மரியாதை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறதா?

எழுத்தாளரைப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பாளருக்கு கிடைக்கும் மரியாதை மிகவும் குறைவுதான். மொழிபெயர்ப்பு என்ற ஒன்று இல்லை என்றால் உலக அறிவு சேகரம் என்பதே இல்லையே. தமிழில் கடந்த 20 வருடங்களாக மொழிபெயர்ப்பாளர் களுக்கான அங்கீகாரம் நிறைவாகவே இருக்கிறது.

0 Comments

Write A Comment